எண்ணெய் தேய்ச்சுக் குளிங்க.. அப்புறம் "குடிங்க"... தீபாவளிக்கு ரூ. 370 கோடி "சரக்கு" விற்க இலக்கு!
சென்னை: தீபாவளி பண்டிகையின் போது ரூ. 370 கோடிக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்துள்ளதாம்.
பல்வேறு காரணங்களால் பருப்பு விலை சகட்டு மேனிக்கு உயர்ந்துள்ளது. இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பருப்பு வடை, சாம்பார், பருப்பு பாயாசம் போன்றவை எல்லாம் சாமானிய மக்களுக்கு நினைத்துப் பார்க்கக் கூட முடியாததாக உள்ளது.
ஆனால், கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை கதையாக "டாஸ்மாக் தீபாவளி"க்கு சரக்கு விற்பனை இலக்கை நிர்ணயித்து விற்பனை செய்து வருகிறது.
டாஸ்மாக்...
தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரத்து 826 டாஸ்மாக் கடைகளும், 3 ஆயிரத்து 838 பார்களும் உள்ளன. சென்னையில் மட்டும் சுமார் 500 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.
மது விற்பனை...
கடை ஒன்றிற்கு ரூ. 70 கோடி என தினமும் மது விற்பனை செய்யப்படுகிறது. இதுவே விடுமுறை நாட்களென்றால் நாளொன்றிற்கு ரூ. 92 கோடி என்ற அளவில் சராசரியாக மது விற்பனை நடைபெறுகிறது.
பண்டிகை நாட்களில் கூடுதல்...
பண்டிகை நாட்களென்றால் சொல்லவே வேண்டாம். குடிமகன்கள் குஷியாகி டாஸ்மாக்கிற்கு இன்னும் வருமானத்தை அதிகமாக்கி விடுவார்கள்.
விலை உயர்வு...
இந்நிலையில், சமீபத்தில் மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வு வரி உயர்த்தப்பட்டது. இதனால் மது விலை அதிகரித்தது. சாதாரண மற்றும் நடுத்தர மதுபானங்கள் விலை 12.5 சதவீதமும், உயர்ரக மதுபானங்கள் விலை 22.5 சதவீதமும் விலை உயர்த்தப்பட்டது. இதனால், அரசுக்கு கூடுதலாக ரூ.2,500 கோடி வரை வருவாய் அதிகரித்து கிடைத்து வருகிறது.
விற்பனை அதிகரிப்பு...
இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டாஸ்மாக்கில் மது விற்பனையும் அதிகரித்து வருகிறது. எனவே, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு டாஸ்மாக்கில் மது அதிகளவில் விற்பனை செய்ய வேண்டும் என அதிகாரிகள் தீயாய் வேலை செய்துவருகின்றனர்.
ஆண்டுக்கு ஆண்டு அதிகம்...
கடந்த 2013-ம் ஆண்டு தீபாவளியின் போது டாஸ்மாக்கில் ரூ.230 கோடிக்கு மேல் மது விற்பனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2014-ம் ஆண்டு தீபாவளியையொட்டி 3 நாள்களுக்கு ரூ.303 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இது பார்ப்பதற்கு லாபமாகத் தோன்றினால், விலைவாசி உயர்வால் இந்த வித்தியாசம் ஏற்பட்டது.
ரூ. 370 கோடி இலக்கு...
எனவே, இந்தாண்டு தீபாவளிக்கு கடந்த ஆண்டுகளை விட அதிக வித்தியாசத்தில் மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என டாஸ்மாக் கடைகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்களாம். அதன்படி இந்தாண்டு ரூ. 370 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
கூடுதல் இருப்பு...
இதற்கென ஒவ்வொரு கடைகள்லும் கூடுதலாகவே மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளனவாம். பண்டிகையின் போது ஆசையாக குடிக்க வரும் மக்களை ஏமாற்றி விடக் கூடாது என்பதால் இந்தச் சிறப்பு ஏற்பாடு.
புகார்...
இதற்கிடையே கேட்ட மதுபானம் கிடைப்பதில்லை, அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று குடிமகன்களிடமிருந்தும் அதிகாரிகளுக்கு புகார்கள் வருகின்றனவாம். அவற்றை சரி செய்யும் வகையில் தாலுக்கா வாரியாக தாசில்தார், காவல்துறை அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் கொண்ட குழுவினர் டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
மதுவிலக்கு...
மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலைப் பாடியதற்காக பாடகர் கோவன் கைது செய்யப்பட்டார். டாஸ்மாக்கை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் தனது உயிரையே தியாகம் செய்தார் காந்தியவாதி சசிபெருமாள். டாஸ்மாக் கடைகளை மூடுங்கள் என அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக கூவினாலும், அவர்களின் பின்னால் நிற்கும் மக்களின் பெரும்பாலானோர் மதுவால் வாழ்க்கையை இழந்தவர்கள் தான்.
எப்படி முன்னேற்றலாம்...
இப்படி மதுவிலக்கு கோஷங்கள் ஒருபுறம் இருந்தாலும், பொன்முட்டை இடும் வாத்தாக இருக்கும் டாஸ்மாக்குகளை எப்படி எல்லாம் முன்னேற்றுவது என அதிகாரிகள் ரூம் போட்டுத்தான் யோசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
கண்ணீரில் மிதக்கும் பெண்கள்...
போகிற போக்கைப் பார்த்தால் பண்டிகைகள் தோறும் நம் பாசத்திற்குரிய, ஏமாளி குடிமகன்கள் மதுக்கடைகளில் தான் குடியிருப்பார்கள் போல. பாவம் அவர்கள் ‘தண்ணீரில்' மிதக்க, அவர்கள் குடும்பம் கண்ணீரில் மிதக்கப் போகிறது.