இடைத்தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு மூடுவிழா
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையொட்டி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது.
ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். தேர்தலில் அவரை வெற்றி பெற வைக்க அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு ஆர்.கே. நகர் தொகுதியில் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்தார். அவர் வீதி, வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து பிரச்சாரம் முடிவதில் இருந்து வாக்குப்பதிவு நடைபெறும் 27ம் தேதி இரவு 12 மணி வரை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தவிர தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் 30ம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.