மழை வெள்ளத்திலும் தங்கு தடையின்றி செயல்பட்ட டாஸ்மாக்
சென்னை: அடாது பெய்தாலும், விடாது எங்கள் கடமையைச் செவ்வணே செய்வோம் என சென்னை வெள்ளத்திலும் தங்கு தடையின்றி கிடைத்த பொருள் ஒன்று உண்டென்றால் அது ‘சரக்கு' மட்டும் தான்.
அடை மழை, திடீர் வெள்ளம் என எதையுமே எதிர்பார்க்காத மக்கள், அத்தியாவசியப் பொருட்களைப் பெற மிகவும் அல்லாடித் தான் போனார்கள். எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என கடும் தட்டுப்பாடுகளுக்கு இடையே பால் பாக்கெட் ரூ. 100க்கும், மெழுகுவர்த்திகள் ரூ. 50க்கும் விற்பனை செய்யப்பட்டன.
கையில் காசிருந்தவர்கள் எவ்வளவு விலை கொடுத்தேனும் இந்தப் பொருட்களை வாங்கினார்கள். காசில்லாதவர்களோ நிவாரண முகாம்களில் தரப்படும் உணவுகளைக் கொண்டு பசியாறினார்கள்.
நிவாரணப் பொருட்கள்...
பல இடங்களில் நிவாரணப் பொருட்கள் கிடைப்பதற்கே பெரும் பாடாகத் தான் இருந்தது. வெள்ளத்தால் போக்குவரத்து முடங்கிய சாலைகள், அரசியல் என பல்வேறு தடைகளைத் தாண்டி தான் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்கள்.
டாஸ்மாக் கடைகள்...
ஆனால், இத்தனை ரண களத்திலும், ‘குடி'மகன்களின் குதூகலம் மட்டும் குறையாமல் டாஸ்மாக் கடைகள் பார்த்துக் கொண்டது தான் ஆச்சர்யம்.
அம்மா ‘குடி’நீர்...
இது தொடர்பாக வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் உலா வருகிறது. அந்த வீடியோவிற்கு அம்மா குடி' நீர் எனப் பெயரிடப் பட்டுள்ளது. அதில், மழை நீரில் நகர முடியாத வேன் ஒன்றை சிலர் மிகவும் கஷ்டப்பட்டு தள்ளுகின்றனர்.
என்னா சின்சியாரிட்டி...
அப்படி அந்த வேனுக்குள் என்ன இருக்கிறது எனப் பார்த்தால், அனைத்தும் சரக்கு பாட்டில்கள். உண்மை தான் சென்னையில் எத்தனையோ அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோதும், எங்கும் மது விற்பனை தடையில்லாமல் தான் நடந்தது.
இது தான் கருத்து...
டாஸ்மாக்கிற்கு சரக்கு கொண்டு செல்வதில் ஊழியர்கள் காட்டிய அக்கறையை மற்ற நிவாரணப் பொருட்களுக்கும் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கருத்து சொல்கிறது இந்த வீடியோ.