சென்னை பெண் டாக்டர் கொலையில் திடீர் திருப்பம்... ஐ போனுக்காக நடந்த கொலை என தகவல்.. ஒருவர் கைது
சென்னை: சென்னையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பெண் டாக்டர் சத்யா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் வைத்திருந்த ஐபோனை திருடுவதற்காக இந்த கொலையைச் செய்ததாக திரிபுராவைச் சேர்ந்த ஒரு என்ஜீனியரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தவர் டாக்டர் சத்யா (32). கீழ்ப்பாக்கம் கும்மாளம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது தோழியும் டாக்டருமான சங்கீதாவுடன் வசித்து வந்தார். கடந்த 21ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக 6 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வந்தனர். டாக்டர் சத்யாவின் கணவர் டாக்டர் ஜேசு, சத்யாவின் தோழி டாக்டர் சங்கீதா, மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் துப்பு ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து மருத்துவ மாணவர்கள் போராட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில் இன்று இந்த கொலை வழக்கி் அதே குடியிருப்பில் வசித்து வந்த பக்கத்து வீட்டுக்காரரான ஹரிந்தம் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஹரிந்தின் சொந்த ஊர் திரிபுரா. அவரது தந்தை பெயர் நாராயண். அண்ணன் சிரஞ்சித் டாக்டராக பணி புரிகிறார். ஹரிந்தமும், சிரஞ்சித்தும் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.
என்ஜினீயரான ஹரிந்தம் மதுரவாயலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.டெக் முடித்துள்ளார். தற்போது வேலை தேடி வந்தார். கடந்த 2 வருடமாக அதே அறையில் தங்கி இருக்கிறார். டாக்டர் சத்யா 3 மாதத்துக்கு முன்புதான் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தார். டாக்டர் சத்யா ஐபோனில் பேசுவதை ஹரிந்தம் அடிக்கடி பார்த்துள்ளார். அந்த போனை அபகரிக்க திட்டம் போட்டார். சம்பவத்தன்று டாக்டர் சத்யா வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஹரிந்தம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்தார்.
இதைப் பார்த்து சத்யா சத்தம் போட முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த ஹிந்தம், அவரைப் பிடித்து தள்ளினார். இதில் சுவற்றில் மோதி விழுந்தார் சத்யா. பின்னர் அங்கிருந்த கத்தியை எடுத்து டாக்டர் சத்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு ஐபோனை எடுத்துக் கொண்டு தப்பினாராம் ஹரிந்தம்.
ஹரிந்தம் தான் திருடிய ஐபோனில் இருந்த சிம்கார்டை தூக்கி வீசி விட்டு ஐபோனை கோயம்பேட்டில் செல்லையா என்பவரது கடையில் விற்றார். அந்த ஐபோனை வேறு ஒருவர் விலைக்கு வாங்கி தனது சிம்கார்டை போட்டு பயன்படுத்தினார். அந்த ஐபோனில் ஐ.எம்.இ. நம்பர் மூலம் செல்போனை பயன்படுத்தியவரை முதலில் போலீசார் பிடித்தனர். அவர் கோயம்பேட்டில் உள்ள கடையில் வாங்கியதாக தெரிவித்தார்.
பின்னர் கடைக்காரர் கூறிய தகவலை வைத்து ஹரிந்தமை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது தான் கொலை செய்யவில்லை என்று கூறி மறுத்தார். பின்னர் ஐபோனை அவரிடம் காட்டியபிறகே கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
கைதான ஹரிந்தம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
என்ஜினீயரிங் முடித்த எனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் படித்து முடித்த பின்னரும் எனது அண்ணன் சிரஞ்சித்துடன் சென்னையில் அங்கேயே தங்கி இருந்து வேலை தேடி வந்தேன். நீண்ட நாளாக விலை உயர்ந்த ஐபோன் மீது எனக்கு ஆசை. படித்து முடித்தபின் எப்படியாவது அதை வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனது எண்ணம் ஈடேறவில்லை.
கடந்த 21ம் தேதி அன்று காலையில் நாங்கள் குடியிருந்த 2வது மாடியில் அனைவருமே வெளியே சென்று விட்டனர். காலை 10 மணி அளவில் எழுந்த நான் எனது துணிகளை துவைப்பதற்காக தண்ணீரில் ஊறவைத்தேன். அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் யாருமே இல்லாததால் அமைதியான சூழல் நிலவியது. இதுதான் செல்போன் திருட சரியான நேரம் என நினைத்து உள்ளே சென்று அறையில் இருந்த ஐபோனை எடுத்தேன்.
இன்னொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த சத்யா சத்தம் கேட்டு வெளியே வந்தார். என்னை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். இதனால் பயந்து போன நான் சத்யாவை சுவற்றில் தள்ளி வீட்டில் இருந்த கத்தியால் குத்தி கொலை செய்தேன்.
இந்த கொலை தொடர்பாக சங்கீதாவை அழைத்துச் சென்று அவரிடமே போலீசார் கடுமையாக விசாரித்தனர். இதனால் தப்பித்துக் கொள்ளலாம் எனக்கருதிய நான் மறுநாள் சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்த சத்யாவின் செல்போனை கோயம்பேட்டில் எனக்கு தெரிந்த ஒருவரது கடையில் விற்பனை செய்தேன் என்று கூறியுள்ளாராம் ஹரிந்தம்.