அரசை விமர்சித்தால் ஜெயில்- சந்திரசேகர்ராவின் அதிரடி சட்டம்! தமிழகத்திற்கு வந்தால் என்னவாகும்?
தெலங்கானாவில் தனி நபரையோ குறிப்பிட்ட அமைப்பையோ விமர்சித்தால் நீதிமன்ற அனுமதியின்றி உடனடியாக கைது செய்யும் வகையிலான சட்ட திருத்தம் செய்யப்பட உள்ளது.
ஹைதராபாத் : அரசின் நிறுவனங்களையோ, தனி நபர்களை விமர்சித்தோ கருத்துகள் தெரிவிக்கப்பட்டால் நீதிமன்ற அனுமதியின்றி உடனடியாக கைது செய்து சிறையிலடைக்கும் சட்ட திருத்தத்தை தெலங்கானா அரசு கொண்டு வர முடிவி செய்துள்ளது. சமூக வலைதளங்கள், மொட்டைக்கடிதாசிகள், மெயில்கள் என எந்த வடிவத்தில் இந்த விமர்சனங்கள் வந்தாலும் அவர்களுக்கு தண்டனை உறுதி என்றும் திருத்தப்பட இருக்கும் சட்டம் சொல்கிறது.
தெலங்கானா மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் அதிரடி சட்ட திருத்தம் ஒன்றிற்கு ஒப்புதல் தந்துள்தாக முதலமைச்சர் அலுவலகம் கூறுகிறது. இந்த சட்ட திருத்தத்தின் படி தனி நபரையோ அல்லது அரசு நிறுவனங்களையோ கடுமையான வார்த்தைகளால் வசைபாடினால் அவர்களுக்கு சிறைத் தண்டனை கட்டாயம்.
மாஜிஸ்திரேட் அனுமதியின்றி சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக சிறையில் அடைக்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் 506 மற்றும் 507ல் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. தனி நபர் மீதான கிரிமினல் குற்றங்களுக்கு பிரிவு 506ன்படியும், கிரிமினல் நோக்கத்துடன் அடையாளப்படுத்தாத முறையில் (சமூக வலைதளங்கள், மொட்டைக்கடுதாசிகள், ஈமெயில்கள்) தொடர்பு கொள்ளும் குற்றத்திற்காக சட்டம் 507ஐ பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் அனுமதியின்றி
இந்த சட்டங்களின்படி கடினமான வார்த்தைகள் மூலம் விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு 2 முதல் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் சேர்த்தோ விதிக்கப்படலாம். இதில் முக்கியமான விஷயம் மாஜிஸ்திரேட் அனுமதி பெறாமலே இந்த நடவடிக்கை சம்பந்தப்பட்ட நபர் மீது பாயலாம் என்பது தான்.

சட்ட நிபுணர்கள் எதிர்ப்பு
ஆனால் இந்த சட்ட திருத்த மாற்றம் தவறான வழியில் பயன்படுத்தப்படலாம் என்று சட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். தெலங்கானா அரசின் மீது யாரும் விமர்சனம் வைத்துவிடக்கூடாது என்ற நோக்கத்திற்காக அரசியல் அடிப்படையில் இந்த சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சுதந்திரத்தில் தலையீடு
இதே போன்று மக்களின் பேச்சுரிமையை பறிக்கும் திட்டம் இது என்று தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் தசோஜூ ஷ்ரவன் தெரிவித்துள்ளார். ஒரு நபரை தனிப்பட்ட முறையிலோ, சொல்லக் கூடாத கருத்து மற்றும் படங்களை வைத்தோ வெளியிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், ஆனால் கடினமான வார்த்தைகளை பயன்படுத்தினாலே கைது என்பது மக்களின் சுதந்திரத்தில் தலையிடுவது என்றும் அவர் கூறியுள்ளார்.

முதலில் யார் கைது?
தமிழகத்தில் அமைச்சர்கள் முதல் அரசியல்வாதிகள் அனைவருமே கடினமான வார்த்தைகளை பொது மேடைகளில் பயன்படுத்துவது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தெலங்கானா மாநிலம் போல இங்கும் சட்டம் வந்தால் முதலில் கைது செய்யப்படுவது யாராக இருக்கும் என்று கற்பனையும் ஒரு பக்கம் ஓடுகிறது.












Click it and Unblock the Notifications