அசுத்தமாகும் தாமிரபரணி... மாணவர்களுடன் கைகோர்க்கும் சமூக ஆர்வலர்கள்
தாமிரபரணியில் குவியும் அசுத்தங்கள் நாளுக்குநாள் அதிகமாவதால், கல்லூரி மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளனர்.
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலந்து அசுத்தமாகி வருவதால் அதைத் தூய்மைப்படுத்த மாணவர்களுடன் கைகோர்த்து செயல்பட சமூக ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளது பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சமீப காலமாக தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் திறந்து விடப்படுகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள், ஹோட்டல் கழிவுகள் அதிக அளவில் தாமிரபரணியில் கலந்து மாசுப்பட்டு வருகிறது. இதை தடுக்கவும், தாமிரபரணியைப் பாதுகாக்கவும் கலெக்டர் சந்தீப் நந்தூரி திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு துறை அதிகாரிகள், தனியார் துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில், " 11 இடங்களில் கழிவு நீர் கலப்பதும், பல இடங்களில் திறந்த வெளி கழிப்பறையாக பயன்படுத்து வதும் தெரிய வந்துள்ளது. அந்த பகுதிகளில் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. திறந்த வெளி கழிப்பிடத்தை தடுப்பது, கழிவுநீர் கலப்பதை தடுப்பது, ஆகாய தாமரை செடிகளை அகற்றுவது போன்ற பணிகளை தனியார், அரசு துறை பங்களிப்புடன் மாணவ, மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது" என்ற முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இனி ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தாமிரபரணியில் தூய்மைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications