சோபியா செய்தது தப்புன்னா.. தமிழிசை செஞ்சது அதை விட பெரிய தப்பாருக்கே
சோபியா விவகாரத்தை தமிழிசை பெரிதாக்கி விட்டார்.
Recommended Video
சென்னை: பாஜக தமிழக தலைவர் தமிழிசையே இப்படி நடந்து கொள்ளலாமா?
தூத்துகுடி விமானத்தில் தமிழிசை பயணம் செய்ய... அப்போது சோபியா என்ற பெண் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட... அதனை கண்டு அதிர்ச்சியடைந்த தமிழிசை, சோபியாவுடன் வாக்குவாதம் நடத்த... என பறக்கும் விமானத்திலேயே சண்டை முட்டிக் கொண்டது. பெண்கள் தகராறு என்று வந்து விட்டால் பறக்கும் விமானமாக என்ன, மிதக்கும் கப்பலாக இருந்தால் என்ன?
வழிமுறை கிடையாதா?
முதலில் இந்த விவகாரத்தில் முதல் தவறு இளம் பெண் சோபியாவுடையதுதான். அனைவருக்குமே கருத்து சுதந்திரம் உள்ளதுதான். தனது கருத்துக்களை பதிவு செய்யவோ, உணர்வுகளை பிரதிபலிக்கவோ அதற்கான வழிமுறைகள் உள்ளது. பொது இடங்களில் முழக்கமிடுவது வேறு ! பலதரப்பட்ட கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் பயணம் செய்யும் விமானம் உள்ளிட்டவற்றில் முழக்கம் போடுவது வேறு. அடுத்தவர்களுக்கு தொந்தரவு செய்யும் விதத்தில் நடந்துகொண்டால் ஒரு வருட சிறை என்பது கூட தெரியாதா கனடாவில் படிக்கும் சோபியாவிற்கு?
அமைதிக்கு குந்தகம்
கனடா நாட்டில் இப்படித்தான் அநாகரீகமாக சத்தம் போட அனுமதிப்பார்களா? அங்கு சத்தம் போட்டாலே குற்றமாயிற்றே! அரசியல் கொள்கைகளும், கோட்பாடுகள் மாறலாம். அதற்காக பொது இடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்திருக்க கூடாது. நாளை சோபியாவை பார்த்துவிட்டு மற்ற கட்சிக்காரர்களும் இப்படி விமானத்தில் கோஷம் போட்டால் என்னாவது? இது ஜனநாயக நாடுதான், ஆனால் எதிர்ப்பை தெரிவிக்க முறை என்று ஒன்று உள்ளது. அதைதான் சோபியா செய்திருக்க வேண்டும்!
பாரம்பரிய குடும்பம்
அடுத்த தவறு தமிழிசை உடையது. ஒரு கட்சியின் மாநில தலைவர், ஒரு மருத்துவர், அரசியல் பாரம்பரிய குடும்பத்திலிருந்து வந்தவர்... ஒரு சிறு பெண் முழக்கமிடுவதை இந்த அளவுக்கு விவகாரமாக்குவதா? அந்த பெண்ணை விட வயது மூத்தவராக இருந்துகொண்டு தமிழிசை இந்த விவகாரத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்ள வேண்டுமா?
முதிர்ச்சியின் வெளிப்பாடா?
ஆளும் மத்திய பாஜகவை எதிர்த்து ஒரு இளம் பெண் யாருடைய துணையுமின்றி தனியாளாக குரல் கொடுத்திருக்கிறார். அதனை நேருக்கு நேராக நின்று தமிழிசை சந்தித்து அந்த பெண்ணுக்கு தக்க பதில் கொடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால், அந்த பெண் மீது ஒரு புகார் அளித்துவிட்டு, வந்த வேலையை பார்த்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, அந்த பெண் மீது போலீசை ஏவிவிட்டு சிறை தண்டனை வாங்கி தந்தது பக்குவ முதிர்ச்சியின் வெளிப்பாடா? ஒருவர் தம் கட்சிக்கு எதிரான கருத்தை சத்தம் போட்டு சொல்லிவிட்டால் அது ஏற்புடையதாகும் என்று தமிழிசை நினைக்கிறாரா?
பெண்ணின் வேதனை
விமர்சனங்களை தாங்கிக்கொள்ள தமிழிசைக்கு மனமில்லாததையே இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தனிப்பட்ட முறையில் தன் மீது விமர்சனங்கள் இருந்தால் தமிழிசை கோபப்பட்டிருக்கலாம், இது ஒரு இயக்கத்தின் மீதான கோபம்... "தன் மக்கள் துண்டாடப்பட்டு கொண்டு இருக்கிறார்களோ" என்ற வேதனையில் வெளிப்பட்ட ஒரு இளம்பெண்ணின் கோப வெளிப்பாடு!! அவ்வளவுதான்.
கோ-பேக்-மோடி
பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, எவ்வளவோ பேர் கருப்பு ஆடை அணிந்து "கோ பேக் மோடி" என்றார்களே... அப்போது தமிழிசைக்கு ஏன் கோபம் வரவில்லை? அப்படியே வந்திருந்தாலும் யார் மீது வந்திருக்கும்? எவ்வளவு பேர் மீது வந்திருக்கும்? எவ்வளவு பேர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருப்பார்? இதுதானே அமித்ஷா வரும்போதும் நடந்தது. மூத்த அரசியல் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் தமிழிசை இப்படித்தான் முதிர்ச்சியற்று நடந்து கொள்வதா?
எப்பவும் பழிதான்
மக்கள் போராட்டம் என்றாலே அதில் வன்முறையாளர்கள் புகுந்து விட்டார்கள் என்று சொல்லி விடுவதும், பின்னால் யாரோ இயக்குகிறார்கள் என்பதும், பாஜகவுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை மதத்துக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்துவதும் பாஜகவுக்கு எப்பவுமே ஒரு பொழப்பாகி போய்விட்டது.
எஸ்.வி.சேகர் எங்கே?
சில மணி நேரத்தில் ஒரு பெண்ணை கைது செய்ய வைக்க தெரிந்த தமிழிசைக்கு, பல நாள் தமிழக போலீஸ் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்த எஸ்.வி.சேகரை கைது செய்ய வைக்க முடியாமல் போனது ஏன்? இத்தனைக்கும் சோபியா நாகரீகமாகவே விமர்சித்துள்ளார். ஆனால் இந்த எஸ்வி சேகர் பெண்களை எத்தனை கீழ்த்தரமாக சாடியிருந்தார்.. பெண்ணாக தமிழிசை கொந்தளித்து கோபப்படலையே... இப்படி எஸ்.வி.சேகருக்கு ஒரு நியாயம், சோபியாவுக்கு ஒரு நியாயம் என்று ஒருதலைப்பட்சமாக செயல்பட்டால், 'பாசிச பாஜக ஒழிக' என்றுதானே முழக்கங்கள் பீறிட்டு எழும்?!!
சபாஷ்...மாணவர்களே!!
இந்த விஷயத்தில் பல அரசியல் கட்சிகள் சோபியாவுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழிசைக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. நல்ல விஷயம்தான்! ஆனால் அரசியல் கட்சிகள் யாராவது களத்தில் இறங்கி போராடினால்தான் அந்த பெண்ணுக்கு முழு ஆதரவு என்று அர்த்தம். இல்லையென்றால், கைதாகியுள்ள மாணவிக்கு சட்ட ரீதியான உதவிகளையாவது அரசியல் கட்சிகள் செய்ய முன்வரவேண்டும். வெறுமனே ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் கருத்துக்களை பதிவிடுவது என்பது மாணவிக்கான முழு ஆதரவு ஆகாது. வழக்கம்போல் நம் மாணவர்களே சோபியா விவகாரத்திலும் போராட்டத்தில் இறங்கி கரம் கோர்த்து திரண்டு விட்டனர்.
கோபத்துடன் வெளியே போனால்
எப்படி இருந்தாலும் இந்த விவகாரத்தை பொறுத்தவரை சோபியா செய்தது சிறு தவறு என்றால், தமிழிசை செய்தது பெரிய தவறு. பேனை பெருமாள் ஆக்கும் முயற்சியை தமிழிசை இனி கைவிட்டு, கோபத்தோடு வெளியே போகிறவன் நஷ்டத்தோடு வீடு திரும்புவான் என்பதை தமிழிசை உணர வேண்டும்.. சோபியாவும்தான்.