எழும்பூர் அருங்காட்சியகத்தில் பஞ்சவர்ணக்கிளி பார்க்க போகலையா?
சென்னை: சென்னையில் எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பஞ்சவர்ணக்கிளி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
சென்னை அரசு அருங்காட்சியகம் உலகில் மிகவும் பழமை வாய்ந்த அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். இது 160 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.
இங்கு தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏராளமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த வளாகத்தில் கன்னிமரா நூலகம், நிரந்தர புத்தக விற்பனை நிலையம் மற்றும் கலையரங்கமும் அமைந்துள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.
அருங்காட்சியகத்தில் இம்மாதம் பார்வையாளர்களை கவரும் வகையில் தென் அமெரிக்க பஞ்சவர்ணக்கிளி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நம் ஊர் பச்சைக் கிளிகளை பார்த்து ரசித்த மக்கள், தென் அமெரிக்க பஞ்சவர்ணக்கிளிகளை ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர். குழந்தைகளுக்கு பஞ்சவர்ணக்கிளி பற்றியும், அது உணவு உண்ணும் விதம் பற்றியும் பெற்றோர்கள் விளக்கினர்.