கஞ்சா விதை கொடுங்க.. கலெக்டருக்கு ஷாக் கொடுத்த கடலூர் விவசாயி!
குறைதீர் கூட்டத்தில் கஞ்சா விதைகளை கேட்ட விவசாயி.
கடலூர்: விவசாயிகளின் குறைகளை தீர்க்கத்தான் வார வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இங்கு விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளை வாய்மொழியாகவும் அல்லது மனு மூலமாகவும் கோரிக்கையாக வழங்குவார்கள். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். கடலூரில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் ஒரு விவசாயி பரபரப்பைக் கிளப்பினார்.
இப்படித்தான், கடலூர் மாவட்டத்தில் விவசாயக் குறைகேட்பு கூட்டம் இன்று நடந்து கொண்டிருந்தது. கலெக்டர் தண்டபாணி இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தி கொண்டிருந்தார். எல்லோரும் தங்களது கோரிக்கைகளை சொல்லி வந்தனர். திடீரென ஒரு விவசாயி எழுந்தார். "எனக்கு கஞ்சா விதை வேண்டும்" என்றார். இதைக் கேட்டதும் கலெக்டர் முதல் எல்லோருக்குமே பெரிய ஷாக்.

தொடர்ந்து விவசாயி பேசும்போது, "ஆங்கில மருத்துவத்தின் மூலம் சில நோய்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் சித்த மருத்துவத்தின் மூலம் பல்வேறு நோய்கள் தீர்க்கப்படுகின்றன. கஞ்சா இலை சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு கஞ்சா செடிகளை பயிரிடுவதற்காக கஞ்சா விதைகளை வழங்க வேண்டும்" என்றார்.
பின்னர் சுதாரித்து பேசிய கலெக்டர் தண்டபாணி, கஞ்சா பயிரிடுவது சட்டப்படி குற்றம். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களுக்கெல்லாம் அரசு அனுமதி வழங்காது. எனவே கஞ்சா செடி பயிரிடக்கூடாது என்றார். கஞ்சா விதைகளை கேட்ட அந்த விவசாயியின் பெயர் குமரகுரு என்பதாகும். கஞ்சா செடி வளர்க்க கனடா நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளதை போலவே இந்தியாவிலும் சித்த மருத்துவத்துக்கு கஞ்சா செடிகளை விதைத்தால் ஏராளமான நோய்கள் குணமாக்கப்படும் என்று சொல்கிறாராம் இவர்.












Click it and Unblock the Notifications