குப்பைகளை சீர்படுத்த வந்த துப்புரவுத் தொழிலாளர்கள் மீது அரசு அக்கறை காட்டவில்லை: ஸ்டாலின் கண்டனம்
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் குப்பைகளை சீர்படுத்த வந்த துப்புரவுத் தொழிலாளர்கள் மீது அதிமுக அரசு அக்கறை காட்டவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்டாலின் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளது:
மழை வெள்ளத்தால் சென்னையில் குவிந்து கிடந்த குப்பைகளை சீர்படுத்த இரவு பகலாக அகற்ற பாடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் அவர்களின் சுகாதார வசதிகள் குறித்து அதிமுக அரசு அக்கறை காட்டாதது வேதனைக்குரியது. இதனால் துப்புரவு தொழிலாளர் பழனிச்சாமி உயிரிழக்க இந்த அரசு காரணமாக இருந்துள்ளது கடும் கண்டத்திற்குரியது.

சென்னையில் உள்ள மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொள்கிறேன். வெளி மாவட்ட தொழிலாளர்களுக்கு சென்னையில் அவர்களின் பணி முடிந்து விட்டது என்றால் அவர்களை பாதுகாப்பான முறையில் சொந்த ஊர்களுக்கு திரும்ப அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டு கொள்ளும் அதே நேரத்தில் இதுவரை அவர்கள் சென்னையில் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் பொருட்டு சிறப்பு நேர்வாக நிதியுதவி செய்ய வேண்டும்.
அவர்களின் கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வும் தற்காலிக ஊழியர்களாக இருந்தால் பணி நிரந்தரமும் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொள்கிறேன். துப்புரவு தொழிலாளர்களிடம் மனித நேயத்துடன் அதிமுக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications