நாப்கின்களால் மாசாகும் சுற்றுச்சூழல் - மனுவின் மீதான தீர்ப்பினை தள்ளி வைத்தது பசுமை தீர்ப்பாயம்!
சென்னை: நாப்கின் மற்றும் டயாபர் துணிகளால் சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட தீர்ப்பின் வழக்கினை பசுமை தீர்ப்பாயம் தள்ளி வைத்துள்ளது.
சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ராயப்பேட்டையைச் சேர்ந்த ஜி.விஜயகுமார் தாக்கல் செய்த மனுவில், "மும்பையில் இயங்கும் பிராக்டர் அண்டு கேம்பிள், ஜான்சன் அண்டு ஜான்சன், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ், குபிக் பயோசயன்ஸ், ராயல் ஹைஜீன் மற்றும் புனேயில் உள்ள கும்பர்லி கிளார்க் லீவர் ஆகிய நிறுவனங்கள், பெண்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான சானிட்டரி நாப்கின் மற்றும் டயாபர் ஆகியவற்றை தயாரிக்கின்றன.
இந்த பொருட்களில் மரக்கூழ், எஸ்.ஏ.பி. என்ற பாலிமர் வேதிப்பொருள், பாலி எத்திலின் திரை, என்றுமே அழியாத பிளாஸ்டிக் ஆகியவை வைக்கப்படுகின்றன. அவற்றை வெண்மையாக்குவதற்காக குளோரின் பிளீச்சும் செய்யப்படுகிறது. உபயோகத்துக்கு பின் ஆங்காங்கே அவை வீசப்படுகின்றன.
அந்த நாப்கின் மற்றும் டயாபரில் உள்ள வேதிப்பொருட்களால், நீர்நிலைகள், நிலங்கள் என பல்வேறு பகுதிகளில் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுகிறது. இன்செனரேட்டர் என்ற கருவி மூலம் எரித்தால்கூட, காற்றை அது மாசுபடுத்துகிறது.
இதனால் தேச அளவில் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள 15 லட்சம் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, உபயோகப்படுத்தப்பட்ட இவற்றை வாங்கி, சுற்றுச்சூழல் கெடாதவாறு பாதுகாப்பாக அழிப்பதற்கான அறிவியல்சார் வழிமுறையை வகுப்பதற்கு தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுவை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் நீதிபதி எம்.சொக்கலிங்கம், பி.எஸ்.ராவ் ஆகியோர் நேற்று விசாரித்தனர். மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.