வழக்கு விவரங்களை போனிலேயே தெரிந்துகொள்ளலாம்.. புதிய ஆப் அறிமுகம்!
வழக்கு விவரங்களை போனிலேயே தெரிந்துகொள்ளும் முறையை சுப்ரீம் கோர்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை: வழக்கு விவரங்களை போனிலேயே தெரிந்துகொள்ளும் டிஜிட்டல் முறையை சுப்ரீம் கோர்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான டிஜிட்டல் மையம் சென்னை ஹைகோர்ட்டில் நேற்று திறக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வழக்கு விவரங்க்ளை டிஜிட்டல் மயமாக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்துள்ளது. அதன்படி ஹைகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் டிஜிட்டல் மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
இந்நிலையில் சென்னை ஹைகோர்ட்டில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மதன் பி.லோகுர் கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தார்.
ஆவணங்கள் பாதுகாப்பு அவசியம்
அதேபோன்று சமரசம் மூலம் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்த மாவட்ட நீதிபதிகளுக்கான பயிற்சியையும் அவர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் வழக்கு தொடர்பான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நீதித்துறைக்கு மிகவும் அத்தியாவசியம் ஆகும் என்றார்.
புதிய ஆப் அறிமுகம்
வழக்கு விவரங்களை டிஜிட்டல் மயமாக்குவதால் ஆவணங்களை காகிதங்களாக வைக்கும் இடம் மிச்சமாகும் என்றும் அவர் கூறினார். கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை செல்போன் மூலம் தெரிந்து கொள்ள புதிய செல்போன் ஆப்பை சுப்ரீம் கோர்ட் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அடுத்த வாரம் முதல்
இந்த செயலி தொடங்கப்பட்ட ஒரு வாரத்தில் 2 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்றும் சுப்ரீம்கோர்ட் நீதிபதி லோகூர் கூறினார். இந்த செயலி அடுத்த வாரம் முதல் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
3 லட்சம் பேர் இணைப்பு
அதேபோன்று இ-மெயில் மூலம் வழக்குகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வசதியையும் அறிமுகப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார். இந்த வசதி தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 3 லட்சம் பேர் அதில் தங்களை சேர்த்துக்கொண்டுள்ளதாகவும் நீதிபதி லோகூர் தெரிவித்தார்.