Exclusive: விசாகா கமிட்டி "ஐவாஷ்".. சர்ச்சை ஐஜி தப்ப வாய்ப்புள்ளது.. உ.வாசுகி பகீர் குற்றச்சாட்டு
விசாகா கமிட்டி நேர்மையாக நடக்காது என வாசுகி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: என்ன கட்டிப்பிடித்தார், முத்தம் கொடுத்தார், பாலியல் தொல்லை அளித்தார் என ஐஜி மீது பரபரப்பு குற்றச்சாட்டை அளித்தவர் பெண் எஸ்.பி. அத்துடன், இந்த புகாரை முதல்வரின் அலுவலகம், டிஜிபி என அனைவருக்கும் அனுப்பி வைத்துவிட்டார்.
இந்த விவகாரம் கனிமொழி எம்.பி,யின் காதுகளுக்கு போக, ஏன் இது சம்பந்தமாக விசாகா கமிட்டி செயல்படவில்லை என அவர் ஒரு கேள்வியை கேட்க, அந்த செய்தி மீடியாவில் பரபரப்பாக வலம்வர.. கடைசியில் ஒருவழியாக விசாகா கமிட்டி அமைக்கப்பட்டும் விட்டது. ஆனால் இப்போதுதான் எக்கச்சக்க சர்ச்சைகள் வெடித்து கிளம்பியுள்ளது.
இந்த விசாகா கமிட்டி நேர்மையாகவும், சட்டப்படியும் செயல்படாது என ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எதற்காக இப்படி ஒரு பகீர் குற்றச்சாட்டு? அமைக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டி மீது என்ன குறை? என்பதை அறிய "ஒன் இந்தியா" முற்பட்டது. அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்தான் இவை.
கேள்வி: விசாகா கமிட்டி என்பது 2013-லேயே சட்டமாக்கப்பட்ட ஒன்று. ஆனால் இவ்வளவு நாள் கழித்து இப்போதுதான் செயல்பட ஆரம்பிக்கிறதே... இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: 2013-ல் உச்சநீதிமன்றத்தில் விசாகா தீர்ப்பு வருவதற்கு முன்னமேயே தமிழகத்தில் பல துறைகளில் பரவலாக அதை அமலாக்க முயற்சி செய்யப்பட்டது. தீர்ப்புக்கு பின்னரும் சில அரசு நிறுவனங்களில் அதை செயல்படுத்தினார்கள். ஆனால் அரசு நிறுவனங்களில் மிக முக்கியமானது காவல்துறை. ஆனால் இந்த விசாகா கமிட்டியை நாங்கள் ஏற்கனவே அமைத்துள்ளோம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அப்படியென்றால், அந்த கமிட்டியை எப்போது போட்டார்கள் என தெரியவில்லை. பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள், கமிட்டி உறுப்பினர்களை பகிரங்கமாக அறிவிப்பது, பாலியல் துன்புறுத்தல்களுக்கு புகார் அளிப்பது, இதெல்லாம் விசாகா கமிட்டியில் உள்ள விதிமுறைகள். இது எதையுமே காவல்துறை செய்யவில்லை. இப்போது தாமதமாக, அதுவும் இந்த வழக்கு வந்தபிறகுதான் கமிட்டியே போட்டிருக்கிறார்கள்.
கேள்வி: காவல்துறையிலேயே விசாகா கமிட்டி வந்துள்ளது குறித்து?
முதலில் என்கேள்வி என்னவென்றால், இதற்கு முன்பு காவல்துறையில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளே வரவில்லையா? எனக்கு தெரிந்து புதுக்கோட்டையில் பெண் போலீஸ் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமே நடைபெற்றது. ஆனால் அதனை கிரிமினல் வழக்காக கூட மாற்றவில்லை. பாதிக்கப்பட்ட பெண் போலீஸ், புதுக்கோட்டை எஸ்.பி. வரை சென்று புகார் கொடுத்தார். அந்த புகாரும் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இப்படி இருந்தால் எப்படி? காவல்துறைதானே மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படி இல்லை என்பதுதான் என் கருத்து.
கேள்வி: சரி... இப்போது அமைக்கப்பட்டுள்ள கமிட்டியில் என்ன குறை?
இதில் முக்கிய குறை என்று பார்த்தால், ஒரே துறையை சார்ந்த பிரதிநிதியை இந்த கமிட்டியில் உறுப்பினராக சேர்த்துள்ளனர். அதாவது, அதே துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்.பி. சரஸ்வதியை நியமித்துள்ளனர். இது சரியில்லை. அனைவரும் ஒரே துறைக்குள் இருக்க கூடாது என்பதால்தான், உச்சநீதிமன்ற விசாகா தீர்ப்பில் 3-ம் நபர் பிரதிநிதி (THIRD PARTY REPRESENTATIVE) என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது உள்ள கமிட்டி அப்படி இல்லையே? உள்ளுக்குள்ளேயே இருக்கும் ஒரு அதிகாரி அல்லது ஓய்வு அதிகாரியை போட்டுக்கொண்டால், அது எப்படி சரியான கமிட்டியாக இருக்க முடியும்? உதாரணத்திற்கு, அந்த அதிகாரியைவிட குற்றவாளி உயர்ந்த நிலையில் உள்ளவர் அல்லது செல்வாக்கு மிக்கவர் என்றே வைத்து கொள்வோம். அங்கு நியாயம் எடுபடுமா? ஏதாவது ஒரு கட்டத்தில் அவரை அட்ஜஸ்ட் செய்து போக வாய்ப்பு இருக்கும்தானே? எனவே வெளியில் இருக்கும் ஒரு அமைப்பின் பிரதிநிதியை கமிட்டியில் போட்டால்தான் அது சரியாக இருக்கும். இப்போது உள்ளது முறையான கமிட்டி ஆகாது.
கேள்வி: விசாகா கமிட்டியை ஏன் காவல்துறைக்கு மட்டும்தான் அமைக்க வேண்டுமா? அனைத்து துறைக்கும் அது பொருந்தும்தானே?
இன்சூரன்ஸ், ரிசர்வ் வங்கி போன்ற பொதுத்துறை உள்ளிட்ட நிறுவனங்களில் இந்த விசாகா கமிட்டி செயல்பட்டுதான் வருகிறது. ஆனால் இது தனியார் நிறுவனங்களில் இந்த கமிட்டி போடவில்லை. இது சம்பந்தமாக மதுரையில் தனியார் மற்றும் பொதுத்துறையில் நாங்கள் ஒரு ஆய்வு நடத்தினோம். அதில், 50 நிறுவனங்களுக்கும் மேல் விசாகா கமிட்டி அமைக்கப்படவில்லை என தெரியவந்தது.
கேள்வி: வேறு எங்கெல்லாம் இதுபோன்று விசாகா கமிட்டி அமைக்க வேண்டிய தேவை உள்ளது?
பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் இது சம்பந்தப்பட்ட ஒரு பாலிசி தேவை. ஊடக நிறுவனங்களிலும் இது அவசியமான ஒன்று. அதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று பத்திரிகையாளர்கள் - பெண்களுக்கான பாதுகாப்பு குறித்தது. மற்றொன்று ஊடகங்களில் பெண்கள் குறித்த செய்திகளை எப்படி வெளியாகிறது என்பதுதான். இந்த இரண்டுக்கும் சேர்த்து ஒரு பாலின நிகர்நிலை கண்ணோட்டத்துடன் கூடிய ஒரு பாலிசி தேவைப்படுகிறது.
கேள்வி: இந்த விசாகா கமிட்டி எப்படி அமைக்கப்பட்டால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
இந்த விசாகா திட்டத்தை எப்படி அமல்படுத்த வேண்டும் என்று தமிழகத்தில் இருக்க கூடிய பல பெண்கள் அமைப்புகள், ஜனநாயக ரீதியாக செயல்படும் அமைப்புகள், மாநில பெண்கள் நல வாரியம், குழந்தைகள் நல வாரியம் போன்றவற்றினை அழைத்து அவர்களின் ஆலோசனையை பெற்று இதனை செயல்படுத்த தொடங்கினால் நல்ல முன்னேற்றம் காணலாம்.
இவ்வாறு உ.வாசுகி கூறி முடித்தார்.