மெர்சல் படத்தில் எந்த காட்சிகளும் நீக்கப்படாது.. தயாரிப்பாளர் அறிவிப்பு
மெர்சல் படத்திலிருந்து எந்த வித காட்சிகளும் நீக்கப்படாது என்று தேனாண்டாள் பிலிம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமா ருக்மணி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை: மெர்சல் படத்திலிருந்து எந்தவித காட்சிகளும் நீக்கப்படாது. எந்த வசனமும் மியூட் செய்யப்படவும் இல்லை என்று தேனாண்டாள் பிலிம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஹேமா ருக்மணி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல் ஆகும். இதில் மருத்துவர்களுக்கு எதிராகவும், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பரிவர்த்தனைக்கு எதிராகவும் வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் காட்சிகளுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து தயாரிப்பாளர் தரப்பும் படக்குழுவும் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டன.
தேனாண்டாள் பிலிம்ஸ் அறிக்கை
இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் மாலை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறியிருக்கையில், மெர்சல் படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானதால் மிகுந்த மனவேதனையை தருகிறது. தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்தை அகற்றவும் தயாராக உள்ளோம். மெர்சல் படம் யாருக்கும் எதிரானதல்ல. அரசுக்கு எதிரான கருத்தை சொல்லும் படம் அல்ல. சாமானிய மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பது தான் இந்த படத்தின் கரு ஆகும்.
நீக்கத் தயார் என முதலில் அறிவிப்பு
சர்ச்சைகள் குறித்து பாஜகவின் தலைவர்களிடம் விளக்கம் அளித்துள்ளோம். அந்த விளக்கத்தை அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே தேவைப்பட்டால் சில காட்சிகளை நீக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தனர்.
|
இரவில் மறுப்பு
இதனால் இன்னும் ஓரிரு நாள்களில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து காட்சிகளை நீக்குவதற்காக தணிக்கை குழுவுக்கு கடிதம் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த முடிவில் திடீர் திருப்பமாக படத் தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ ஹேமா ருக்மணி தனது டுவிட்டரில் பக்கத்தில் காட்சிகளை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
எந்த சீனும் நீக்கம் இல்லை
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில், மெர்சல் படத்திலிருந்து எந்த ஒரு காட்சியையும் நீக்குவதோ அல்லது அவற்றின் ஒலியை நிறுத்துவதோ (மியூட்) செய்யப்படாது. இந்த காட்சிகளுடன் தளபதி விஜய் ரசிகர்கள் படத்தை ரசிக்கலாம் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் மிரட்டலுக்கு தேனாண்டாள் பிலிம்ஸ் அடிபணிந்து விட்டதோ என்று ரசிகர்கள் குழப்பமடைந்த நிலையில் ஹேமா ருக்மணியின் டுவீட்டானது ரசிகர்களுக்கும் நடுநிலைவாதிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.