வைகோவின் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணம் : தடுத்து நிறுத்தக்கோரி பாஜக போலீஸில் புகார்
வைகோவின் நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு நடைபயணத்தை தடுத்து நிறுத்தக்கோரி பாஜக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
Recommended Video
தேனி : நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்தை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடைபயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேனி மாவட்ட பாஜகவினர் காவல்துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆய்வு நடத்த ஆய்வுமையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகளைத் துவக்க ஆயத்தமாகி வருகிறது. இந்த நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் அமைக்கப்பட்டால், தேனி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மதுரையில் இருந்து தேனி வரையிலான நியூட்ரினோ ஆய்வுத் திட்ட எதிர்ப்பு நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், வைகோவின் இந்த நடைபயணத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்று தேனி மாவட்ட பாஜக சார்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகார் மனுவில், வைகோ சட்டம் ஒழுங்கிற்கு கேடு விளைவிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தால் தேனி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று ஆராய்ச்சிக்குழுவினர் தெளிவாக அறிக்கை அளித்து இருக்கும் நிலையில், வைகோ தவறான கருத்துகளைப் பரப்பி வருகிறார். இதனால் தேனி மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, எந்நேரமும் போராட்டம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே வைகோவின் நடைபயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.