தர்மபுரி மருத்துவமனையில் நின்று "ரமணா" போல புள்ளிவிவரத்தை வாசித்த அமைச்சர் விஜயபாஸ்கர்!
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனை பச்சிளங்குழந்தைகள் பிரிவில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததைத் தொடர்ந்து உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பது குறித்து கேட்டறிந்து மருத்துவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினர்.
பின்னர் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் பேசியபோது, "தமிழகத்தின் சிசு இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இன்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்திய அளவில் 1000 உயிருடன் பிறக்கும் குழந்தைகளில் 40 குழந்தைகள் இறப்பு என்று உள்ள நிலையில் தமிழ்நாட்டில் பச்சிளங்குழந்தைகள் இறப்பு 21 தான். தர்மபுரி மாவட்டத்தைப் பொறுத்த வரை இந்த பச்சிளங்குழந்தைகள் இறப்பு விகிதம் 19 தான்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் 32 ஆரம்ப சுகாதார நிலையங்களில் அன்று 1000 ஆக இருந்த குழந்தை பிறப்பு இன்று 4000 ஆக உயர்ந்துள்ளது.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த 24 மணிநேரமும் செயல்படும் பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் போதிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உள்ளனர். தமிழகத்தில் 64 மருத்துவமனைகளில் இந்த பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் ஒவ்வொரு தீவிர சிகிச்சை பிரிவிலும் 16 மருத்துவர்கள், 30 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சேலத்தில் உள்ள பச்சிளங்குழந்தை சிகிச்சை பிரிவு ரூபாய் 50 கோடி செலவில் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தமிழகத்தில் ஒரு சிறந்த மருத்துவமனையாகும். இங்கு குழந்தைகள் பிரிவில் பணியாற்றிவரும் செவிலியர்கள் இருவர் தமிழக அளவில் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நைட்டிங்கேல் விருது பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் சிசு மரண விகிதம் மிக குறைவாக உள்ளது. தாய் மற்றும் சேய் நலம் காக்கும் வகையில் ரூபாய் 12 ஆயிரம் வழங்கப்பெறும் டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்று பயனடைந்துள்ளதாக இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய்மார்கள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் பச்சிளங்குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதையொட்டி மத்திய அரசு ரூபாய் 124 கோடி ஊக்கத்தொகையாக தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.
கடந்த ஆட்சியில் தமிழகத்தில் (2006-2010) பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் 1000-த்திற்கு 29 ஆக இருந்தது. தற்போது 21 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய 45 அவசரகால ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
4 நாட்களில் சிறிதளவு அதிக இறப்பு ஏற்பட்டுள்ளதால் தொடர் கண்காணிப்பிற்காக மருத்துவக்கல்லூரி இயக்குநர் டாக்டர். கீதா லட்சுமி தலைமையில் மருத்துவ நிபுணர் குழு அனுப்பப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அனைத்து பச்சிளங்குழந்தைகளுக்கும் தொடர் கண்காணிப்பு மற்றும் சிறப்பு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் பிரசவம் நடைபெறும் 36 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் சிக்கலான பிரசவங்களை உரிய நேரத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவும், கர்ப்பகால பராமரிப்பை கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டு முயற்சியுடன் மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இணை இயக்குநர் சுகாதாரம், துணை இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் மூலம் எடைக்குறைவான தாய்மார்களை தீவிரமாக கண்காணித்து மேல் சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.