அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைய வாய்ப்பேயில்லை- போட்டுடைத்த தங்க தமிழ் செல்வன்
அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைய வாய்ப்பேயில்லை என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்பேயில்லை என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார். தன்னுடன் வந்த எம்எல்ஏக்களுக்கு ஓபிஎஸ் எத்தனை கோடி கொடுத்தார் என்றும் கேட்டுள்ளார்.
அதிமுக அம்மா அணியில் இணைய எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும், தினகரன் அணியினரும் பேரம் பேசுவதாக ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ சண்முகநாதன் கூறியுள்ளார். தனக்கு வேண்டியதை செய்து தருவதாக அவர்கள் கூறகின்றனர் என்றும் தெரிவித்தார் சண்முகநாதன்.
அதே போல கூவத்தூரில் வருமான வரி சோதனை நடத்தியிருக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறினார் ஓ.பன்னீர் செல்வம். இவர்களின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார் டிடிவி ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன்.
தப்பி வந்து சேர்ந்தவர்
கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி இரவு எம்எல்ஏக்களை சொகுசு பேருந்தில் கூவத்தூருக்கு அழைத்துக்கொண்டு சென்ற போது பேருந்தில் இருந்து பாதி வழியிலேயே இறங்கி வந்து ஓபிஎஸ் அணிக்கு சென்றவர் சண்முகநாதன்.
ரூ. 5 கோடி பேரம்
தங்கள் அணிக்கு வருவதற்கு ரூ. 5 கோடி வரை பேரம் நடப்பதாக சண்முகநாதன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கூவத்தூரில் தங்கியிருந்த எம்எல்ஏக்களுக்கு பணம் வழங்கப்பட்டதாகவும் இதனை எங்கு வேண்டுமானாலும் தாம் கூற தயாராக இருப்பதாகவும் சண்முகநாதன் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை
தினகரன் விதித்த 60 நாள் கெடு நாளையுடன் முடிவடைகிறது. அணிகளை இணைக்கும் பேச்சுவார்த்தை ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே ரகசியமாக நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் இரண்டு அணிகளும் இணையும் வாய்ப்பே இல்லை என்ற அளவிற்கு எம்எல்ஏ சண்முகநாதன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
பகிரங்க குற்றச்சாட்டு
ஒபிஎஸ் அணியில் இருந்து ஆறுகுட்டி எம்எல்ஏ ஈபிஎஸ் பக்கம் சென்றார். அவருக்கு பலகோடி கொடுத்தாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஈபிஎஸ், டிடிவி தினகரன் அணியினர் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் சண்முகநாதன் எம்எல்ஏ.
ரெய்டு நடத்தியிருக்கலாம்
இதனிடையே கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி - டிடிவி தினகரன் இடையேயான மோதலை உற்று கவனித்து வருவதாக கூறினார். குஜராத்தில் நடத்தப்பட்ட ரெய்டு பற்றிய கேள்விக்கு பதில் கூறிய ஓபிஎஸ், கூவத்தூரிலும் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த விடுதியில் ரெய்டு நடத்தியிருக்க வேண்டும் என்றார்.
தங்க தமிழ்செல்வன் காட்டம்
எம்எல்ஏ சண்முகநாதனின் புகாருக்கு பதில் கூறியுள்ள தங்க தமிழ் செல்வன், எத்தனை கொடுத்து எம்எல்ஏக்களை தம் பக்கம் இழுத்தார் ஒபிஎஸ் என்று கேட்டுள்ளார். இவர் டிடிவி தினகரன் ஆதரவாளர் ஆவார்.
கட்சியும், ஆட்சியும்
அதிமுக கட்சி தினகரன், சசிகலாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆட்சி எடப்பாடி பழனிச்சாமியில் தலைமையின் கீழ் நடைபெறுகிறது என்றார் தங்க தமிழ் செல்வன். கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அறையில் ரெய்டு நடந்திருக்க வேண்டும் என்ற ஒபிஎஸ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
அணிகள் இணைய வாய்ப்பில்லை
அதிமுகவின் ஒபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைய வாய்ப்பே இல்லை. டிடிவி தினகரன் ஆதரவாளர்களாக 122 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர் என்றும், ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
மாறும் காட்சிகள்
அதிமுகவில் அடுத்தடுத்து முக்கிய காட்சிகள் அரங்கேறி வருகின்றன. தினகரன் பேட்டி, ஒபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பேட்டி, கூடவே பேரம் நடப்பதாக குற்றச்சாட்டு என அதிமுகவில் நடக்கும் சம்பவங்களால் ஒரே வேடிக்கையாக இருக்கிறது.