ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட கெடு கிடையாது – ஆன்லைனிலும் புதுப்பிக்கும் வசதி
சென்னை: ரேஷன் அட்டைகளில் உள்தாள் இணைப்பதற்கு காலக்கெடு எதுவும் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ரேஷன் அட்டைகளில் உள்தாள்கள் ஒட்டும் பணி முன்னேற்றம் மற்றும் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களின் மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
தற்போது புழக்கத்திலுள்ள ரேஷன் அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 31 ஆம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலை அங்காடிகளிலும் நடைபெற்று வரும் உள்தாள்கள் ஒட்டும் பணி, இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
தங்களுக்கு குறிப்பிடப்பட்ட நாட்களில் செல்ல இயலாதவர்கள் அந்த வாரத்தின் சனிக்கிழமையில் அங்காடிகளில் உள்தாள்களை பெற்றுக்கொள்ளலாம். ரேஷன் அட்டையில் உள்தாளை இணைத்து பெறுவதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. மீதமுள்ள ரேஷன் அட்டைகளில் உள்தாள்கள் ஒட்டும் பணியை துரிதப்படுத்தி, பொது மக்களுக்கு எவ்வித சிரமமுமின்றி, விரைந்து முடிப்பது பற்றி அறிவுறுத்தப்பட்டது.
வெள்ளை நிறமுடைய எப்பொருளும் வேண்டாம் என்ற ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் முகவரி ஆதாரத்திற்காக வழங்கப்படும் மஞ்சள் நிறமுடைய தக்கல் ரேஷன் அட்டைதாரர்கள் அவர்களுடைய என் ரேஷன் அட்டைகளை www.consumer.tn.gov.in என்ற இணையதளத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இணையதளத்தில் ரேஷன் அட்டையை புதுப்பித்துக் கொள்ள இயலாத வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடைய எப்பொருளும் வேண்டாத ரேஷன் அட்டைதாரர்கள், பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்களில் அவர்களுடைய ரேஷன்அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.