தொழிற்சங்கங்களுடன் இனி பேச்சுவார்த்தையில்லை... அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் திட்டவட்டம்!
தொழிற்சங்கங்களுடன் இனி பேச்சுவார்த்தையில்லை என அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: தொழிற்சங்கங்களுடன் இனி பேச்சுவார்த்தையில்லை என அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் 13வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாகப் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். குரோம்பேட்டையில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று மாலை முதலே சென்னை மற்றும் புறநகர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பயணிகளை நடு வழியிலேயே இறக்கி விட்டதால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
தமிழக அரசு ஒப்புதல்
இதனிடையே போக்குவரத்து ஊழியர்களுக்கு, 2.44% ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இனி 2.44% ஊதிய உயர்வு வழங்க தயார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டிற்கு பிறகு சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.57% ஊதிய உயர்வு வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அரசின் முடிவை ஏற்க மறுப்பு
ஆனால் தமிழக அரசின் முடிவை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. 2.57% ஊதிய உயர்வுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காததால் போராட்டம் தொடரும் என்றும் தொமுச, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
மக்கள் பெரும் அவதி
இதனால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் மிகக் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.
திருச்சி, கோவை,மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர் எனதமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயக்கப்படாததால் இன்றும் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
பேருந்துகளை இயக்க நடவடிக்கை
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாமல் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அண்ணா தொழிற்சங்க ஊழியர்களை கொண்டு வழக்கம்போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிக கட்டணம் - எச்சரிக்கை
மேலும் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜபாஸ்கர் எச்சரித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இனி பேச்சுவார்த்தையில்லை
இதனிடையே பணிக்கு திரும்புபவர்களை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை இனி இல்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
15 ஆண்டு நிலுவை தொகை
15 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் தொகையை உடனே தர வேண்டும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனிடையே சென்னை உட்பட பல இடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.