தமிழகத்தில் விற்பனையாகும் பாலில் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனங்கள் இல்லை
தமிழகத்தில் விற்பனையாகும் பாலில் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனங்கள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் விற்பனையாகும் பாலில் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனங்கள் இல்லை என்பது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் உறுதியானது.
மத்திய அரசின் உணவு பகுப்பாய்வுக் கூடங்கள் மற்றும் தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையிடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆய்வு முடிவுகளின் மூலம் உறுதியானது.
கடந்த 2017 மே மாதம், ஆவின் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள், பாலில் ரசாயன கலப்படம் செய்வதாகவும், தனியார் பாலை அருந்துவதால் உயிருக்கு தீங்கு விளையும் என்றும் அடிப்படை ஆதாரம் இல்லாமல் பல முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி வந்தார்...
இந்த குற்றச்சாட்டில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை அறிந்து அதனை பொது மக்களுக்கு தெரிவிக்கும் பணியில் பால் முகவர் சங்கத்தை சேர்ந்த பொன்னுசாமி தகவல்களை சேகரித்தார்.
முதற்கட்டமாக, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையிடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் 01.01.2011 முதல் 15.11.2017 வரை சோதனை செய்யப்பட்ட தனியார் மற்றும் ஆவின் பால் குறித்த ஆய்வு முடிவுகளை சேகரித்தனர். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையிடம் கடிதம் அனுப்பி 24 மாவட்டங்களில் இருந்து தகவல்கள் பெறப்பட்டன.
இந்த தகவல்களில், கடந்த 7 ஆண்டுகளில் 714 மாதிரிகள் பெறப்பட்டு தரப்பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் 4 ஆவின் மாதிரிகளும், தனியார் பால் நிறுவனங்களின் 26 மாதிரிகளும், சில்லறை விற்பனை செய்யப்படும் பால் 58 மாதிரிகளும் பால் பொருட்கள் 49 மாதிரிகளும் , முழு விபரம் இல்லாமல் 35 மாதிரிகளும் என மொத்தம் 172 மாதிரிகளும் தரம் குறைந்தவையாக அடையாளம் காணப்பட்டதாக கோப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் விற்பனையாகும் பால்களில் அதிக அளவில் சில்லறையாக விற்பனையாகும் பாலே, தரம் குறைந்தவையாக அதிக அளவில் அடையாளம் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
மேலும் , மத்திய அரசின் உணவு கட்டுப்பாட்டுத்துறையால் அங்கீகரிக்கப்பட்டு தமிழகத்தில் இயங்கும் 6 பகுப்பாய்வு கூடங்களும் கொடுத்துள்ள தகவல்கள் மற்றும் கோப்புகளில்... உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் 01.01.2011 முதல் 31.03.2018 வரை தமிழகத்தில் 7 ஆண்டுகளில் 1607 மாதிரிகள் பெறப்பட்டு, தர பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் தமிழகத்தில் எந்த ஒரு தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களில் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் கலப்படம் செய்யப்படவில்லை எனவும் அரசு அங்கீகரிக்கப்பட்ட துறைகளிடம் எழுத்துபூர்வமாக பெறப்பட்ட கோப்புகள் மூலம் தெளிவாக தெரிகிறது.
ஆவின், அரசு நிறுவனம் என்பதற்காக அதன் பால் மாதிரிகள் பெருமளவில் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் இந்த கோப்புகள் மூலம் தெரிகிறது.
தமிழக பால் வளத்துறை அமைச்சர் தனியார் பால் நிறுவனங்கள் மீது தெரிவித்த குற்றச்சாட்டுகளில் துளியளவும் உண்மையில்லை என்பது தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையிடம் பெறப்பட்ட தகவல்கள் மூலமும், மத்திய அரசின் உணவு கட்டுப்பாட்டுத்துறையால் அங்கீகரிக்கப்பட்டு தமிழகத்தில் இயங்கும் 6 பகுப்பாய்வு கூடங்களும் கொடுத்துள்ள தர பரிசோதனைகள் முடிவுகள் மூலமும் அம்பலமாகியுள்ளது.
கடந்த ஓராண்டாக பால்வளத்துறை அமைச்சர் தனியார் நிறுவனங்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படை உண்மை இல்லை என்பதும் ஆதாரம் இல்லாத, பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகள் என்பதும் இதன் மூலம் தெரிகிறது.
அனைத்து பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களை, குறிப்பாக அரசு நிறுவனமான ஆவின் பாலை மாதந்தோறும் பரிசோதனை செய்து தமிழக அரசு ஒரு தனி இணையதளத்தை தொடங்கி அதில் வெளியிடுவதன் மூலம் மக்களுக்கு தரமான பால் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய இயலும்.