ஈரோடு: திருட வந்த வீட்டில் தவறி விழுந்த திருடன் பலி
ஈரோடு: ஈரோட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் திருட முற்பட்ட போது, முதியவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர் புதுப்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி. உடல் நலக் கோளாறு காரணமாக இவரது மனைவி முத்துகிருஷ்ணம்மாள், கோவையில் உள்ள தனது மகன் சண்முகவேல் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று மனைவியை பார்ப்பதற்காக கோவை சென்ற பொன்னுசாமி இரவு அங்கேயே தங்கிவிட்டார். மறுநாள் இரவு ஈரோடு திரும்பிய பொன்னுசாமி, தனது வீட்டின் முன்பகுதியில் கம்பிகள் மற்றும் கடப்பாரை கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, பொன்னுசாமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, முன் பகுதியில் உள்ள கூரை ஓடுகள் கழற்றப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. அதன் வழியாக யாரோ வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள் என்பதை யூகித்த அவர், வீட்டின் மேல்தளத்திற்குச் சென்று பார்த்துள்ளார்.
அங்கே, முதியவர் ஒருவர் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி, உடனடியாக இதுகுறித்து மொடக்குறிச்சி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இறந்தவர், நஞ்சை ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (60) என்பதும், அவருக்கு இப்பகுதியில் விவசாய நிலம் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், பொன்னுசாமி கோவை செல்வதை அறிந்த கோவிந்தசாமி திருட வந்திருக்கலாம் என்றும், அப்போது எதிர்பாராத விதமாக மரணமடைந்திருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
.
இதையடுத்து கோவிந்தசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நடந்த சம்பவம் குறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.