போராட்டம் குறித்து நீதிமன்றம் எல்லை தாண்டி விமர்சிக்கிறது: திருமாவளவன் காட்டம்!
ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து நீதிமன்றம் எல்லை தாண்டி விமர்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து நீதிமன்றம் எல்லை தாண்டி விமர்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
பழைய பென்ஷன், 7 வது சம்பள கமிஷன் பரிந்துரை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்திற்கு ஹைகோர்ட் மதுரை கிளை தடை விதித்திருந்தது. ஆனால், தடையை மீறி அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

விமர்சித்த நீதிபதிகள்
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை கடுமையாக விமர்சித்தனர்.

போராட்டம் வாபஸ்
அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு கண்டனங்களையும் தெரிவித்தனர். இதையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

எல்லை தாண்டி விமர்சிக்கிறது
இந்நிலையில் நீதிமன்றங்களின் விமர்சனம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து நீதிமன்றம் எல்லை தாண்டி விமர்சிக்கிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நம்பிக்கையை கெடுக்கும்
நீதிமன்றத்தின் கருத்து சொல்லும் போக்கு மக்களுக்கும் சட்டத்திற்கும் எதிராக இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார். மேலும் நீதிமன்றங்கள் வெளிப்படையாக கருத்து கூறுவது மக்களுக்கு நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கையை கெடுக்கும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications