திருப்பூர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ குணசேகரன் அதிகாரிகளுக்கு எதிராக உண்ணாவிரதம்! - வீடியோ
என்னுடைய தொகுதியில் வளர்ச்சிப் பணிகளில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர் என கூறி திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
திருப்பூர்: அரசு அதிகாரிகள் தனது தொகுதி பணிகளில் மெத்தனம் காட்டுவதாகக் கூறி, திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குணசேகரன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குணசேகரன். இவர் சசிகலா அணியின் ஆதரவாளர். குணசேகரன், தனது தொகுதியில் வளர்ச்சிப் பணியை அதிகாரிகள் செய்யாமல் மெத்தனமாக செயல்படுகிறார்கள் என்று கூறி திருப்பூரில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சாலை ஓரத்தில் ஒரு சிறிய மேடை அமைத்து, அதில் நாற்காலியில் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறார். ஆளும் கட்சி எம்.எல்.ஏவே உண்ணாவிரதம் இருக்கிறாரே என மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். சிலர் அவருக்கு கைகுலுக்கி பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து குணசேகரன் கூறுகையில், அதிகாரிகள் என் தொகுதியின் வளர்ச்சிப் பணிகளைச் செய்யாமல் மெத்தனமாக இருக்கின்றனர். மேலும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஊருக்குள் டாஸ்மாக் கடையை கட்டாயப்படுத்தி வைக்கின்றனர். மக்களுக்கு டாஸ்மாக் கடையை அவர்கள் பகுதியில் அமைப்பதில் விருப்பம் இல்லை என்றால் ஏன் அதிகாரிகள் கட்டாயப்படுத்தி அங்கு வைக்கின்றனர்? இதை நான் வன்மையாக எதிர்க்கிறேன்'' என கூறினார்.
அதிகாரிகள் திருப்பூர் தெற்கு தொகுதியில் பள்ளிக்கூடத்துக்கு புதிய கட்டிடம் கட்ட அனுமதிக்காதது, முருகன் கோயிலுக்கு கோபுரம் அமைக்க மறுப்பது, டாஸ்மாக் கடையை கட்டாயப்படுத்தி அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றார்.
தன் கட்சி ஆட்சியில் இருக்கும்போது, வளர்ச்சிப் பணிகள் செய்ய அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை எனக் கூறி உண்ணாவிரதம் இருக்கும் முதல் எம்.எல்.ஏ இவராகத்தான் இருக்க முடியும்.