நம்ம கூட்டணியில் அவரா? அப்போ "நெவர்”! திருமாவளவனை கை காண்பித்து உடைந்ததா தேமுதிக?
சென்னை: தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் கூட்டணிக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியதற்கும், சந்திரகுமார் உள்ளிட்டோர் தேமுதிகவில் இருந்து வெளியேறியதற்கும் திருமாவளவன் தான் மறைமுக காரணம் என்பதாக அரசியல் வட்டாரம் கிசுகிசுத்து வருகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால், எங்களால் ஓட்டு கேட்டு வாக்காளர்களை சந்திக்க முடியாது என்று ஆதரவாளர்கள் மத்தியில் சந்திரகுமார் அணியினர் சமீப காலமாக பேசி வந்தனராம்.
தற்போது இந்த சாதிய பாகுபாட்டையே சாக்காக வைத்து கட்சிக்கு எதிராக புரட்சி செய்து வெளியேறியுள்ளனர் இந்த அதிருப்தியாளர்கள் என்று சொல்லப்படுகிறது.
சாதி பார்க்காத விஜயகாந்த்
விஜயகாந்த் எப்போதுமே சாதி பார்த்ததில்லை. இதை அவரே பலமுறை கூறியுள்ளார். "தேமுதிக எப்போதும் சாதிப்பாகுபாடு பார்த்ததில்லை. நானும் சாதிப் பார்த்து பழகியதில்லை" என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மேடைக்கு மேடை உறுதியளித்து வந்தார்.
பாமகவுக்கு அடி
தேமுதிக வருகை, தமிழகத்தின் வடமாவட்டங்களில் பாமக செல்வாக்கை கடுமையாக சரித்தது. தேமுதிக பாதிப்பை ஏற்படுத்திய தொகுதிகளில் ஒன்றான மேட்டூரின் எம்.எல்.ஏ.தான் எஸ்.ஆர்.பார்த்திபன்.
குட்டையைக் குழப்பியவர் பார்த்திபன்
இவர் தேமுதிக தலைவர் மீதும், மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்ததது குறித்தும் பல்வேறு கடுமையான விமர்சனங்களை செய்தியாளர்கள் முன்பு வைத்தார். அதற்கு முன்னதாக சேலம் மாவட்டத்தில் இந்தத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தாம் எடுக்கவேண்டிய முடிவுகள் குறித்தும் தனது ஆதரவாளர்களோடு கடந்த சில வாரங்களாக தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.
எப்படி ஓட்டு கேட்க முடியும்?
அப்போது பார்த்திபன், "தேமுதிக தலைமை, மக்கள் நலக் கூட்டணியோடு எப்படி தேர்தல் கூட்டணி வைக்கலாம்? அதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கிறது. அவர்களுக்கும் நமக்கும் ஆகாது. மேலும், திருமாவளனுக்காக அவர் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்காக என்னால் எப்படி ஓட்டு கேட்டு செல்லமுடியும்? அதனால் என்னால் தேர்தல் வேலை செய்ய முடியாது. இந்த நிலையில் ஏன் நாம் திமுக பக்கம் செல்லக் கூடாது. அவர்களும் அழைக்கிறார்கள்" என்று கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தோற்கடிக்க சபதம்
அவரது இந்த நிலைப்பாட்டுக்கு, சேலம் தேமுதிக மட்டத்திலேயே தற்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் சமத்துவ பார்வைகளை புறந்தள்ளிவிட்டு செயல்படும் எம்.எல்.ஏ. பார்த்திபன், கட்சிக்குத் தேவை இல்லை என்றும், அவர் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவருக்கு எதிராக தீவிரப் பிரசாரம் செய்து தோற்கடிப்பது என்றும் சேலம் மாவட்ட தேமுதிகவினர் முடிவு செய்துள்ளனர்.