பனி்மய மாதா கோவில் தேரோட்டம் - விழாக்கோலம் பூண்டது தூத்துக்குடி
தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமய மாதா கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை காண பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்துள்ள பக்தர்கள் தூத்துக்குடியில் குவிந்துள்ளனர்.
தூத்துக்குடி தூய பனிமயமாதா கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.15 மணிக்கு 2ம் திருப்பலியும், 7.30 மணிக்கு ஆயர் இவான் ஆம்புரோஸ் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலியும் நடந்தது. காலை 9 மணி, 10 மணிக்கு சிறப்பு திருப்பலியும் நடந்தது.
பகல் 12 மணிக்கு மதுரை உயர் மறை மாவட்ட பேராயார் பீட்டர் பார்னட்டோ தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. பவனியை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இவோன் ஆம்புரோஸ் ஜெபம் செய்து துவங்கி வைக்கிறார்.
பக்தர்கள் கூட்டம்...
இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மறை மாவட்ட ஆயர்கள், பங்கு தந்தைகள், துணை பங்கு தந்தைகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கபூர், மலேசியா, அந்தமான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தூத்துக்குடியில் குவிந்துள்ளனர்.
விழாக்கோலம்...
திருவிழாவை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை...
பனிமயமாதா கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணியில் டவுன் எஸ்பி துரை தலைமையில் டவுன் டிஎஸ்பி சக்கரவர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் சைரஸ், சுரேஷ்குமார், அரிகரன், ரோனிஸ் ஜெசுபாதம் உள்ளிட்ட சிறப்பு படையினர் செய்து வருகின்றனர்.
உள்ளூர் விடுமுறை...
குற்றங்கள், அசம்பாவிதங்களை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருவிழாவின காரணமாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.