புத்தாண்டு கோலாகலம்.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்தனர்.
திருச்செந்தூர்: முருகக்கடவுளின் ஆறுபடை வீடுகளில் முக்கியமானதாக கருதப்படும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏராளமானோர் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டு அன்று கடற்கரை, கேளிக்கை விடுதிகள் என ஒரு தரப்பினர் சென்றால், மற்றொரு தரப்பினர் கோயில், புனிதஸ்தலம் என்று சென்று கடவுளை வழிப்பாடு செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
சில நாட்களாகவே திருச்செந்தூருக்கு மாலை அணிவித்து பாதையாத்திரையாக பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் புத்தாண்டையொட்டி நேற்று மாலை முதலே குவியத்தொடங்கிய பக்தர்கள் அதிகாலை சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 3 மணிக்கு மார்த்தாண்ட அபிஷேகமும், பிற கால பூஜைகளும் நடைபெற்றன. இதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்ட திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சாமி தரிசனத்தை முடித்துக்கொண்ட பக்தர்கள் இதனைத்தொடர்ந்து அருகே இந்த கடற்கரைக்கு சென்ற குடும்பத்துடன் விளையாடி மகிழ்ந்தனர்.