திருவண்ணாமலை மலைகளில் இரும்புத்தாது எடுக்க 'டிம்கோ' புது விண்ணப்பம்! மீண்டும் வெடிக்கிறது பிரச்சனை!!
சென்னை: திருவண்ணாமலை கவுத்தி- வேடியப்பன் மலைகளில் இரும்புத் தாது எடுக்க ஜிண்டால் மற்றும் தமிழக அரசின் கூட்டு நிறுவனமான டிம்கோ மீண்டும் விண்ணப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்திய அதிகாரம் பெற்ற குழுவின் தலைவர் ஜெயகிருஷ்ணன் கவுத்தி- வேடியப்பன் மலைகளில் நேற்று ஆய்வு நடத்தினார்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே இருப்பது கவுத்தி- வேடியப்பன் மலைகள். இம்மலையில் இரும்புத் தாது எடுக்க ஜிண்டால் குழுமம் 2008-09 ஆம் ஆண்டு முயற்சித்தது. இதற்காக ஜிண்டால் குழுமமும் தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும் இணைந்து டிம்கோ நிறுவனத்தை உருவாக்கி இருந்தது. இதில் ஜிண்டால் குழுமத்துக்கு 99% பங்குகளும் டிட்கோவுக்கு 1% பங்கும் இருக்கின்றன.
ஆனால் அப்போது மிகக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதனால் ஜிண்டால் குழுமத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் கவுத்தி-வேடியப்பன் மலைகளில் இரும்புத்தாது எடுக்க டிம்கோ விண்ணப்பித்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்திய அதிகாரம் பெற்ற குழுவின் தலைவர் ஜெயகிருஷ்ணன் நேற்று கவுத்தி- வேடியப்பன் மலைப் பகுதிகளில் இரும்புத் தாது குறித்து ஆய்வு நடத்திச் சென்றார்.
இதனால் கவுத்தி-வேடியப்பன் மலைகளைப் பாதுகாக்க வேண்டும்.. இரும்புத் தாது வெட்டி எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.