பிளஸ் டூவில் 1176, நீட் 200 - மருத்துவ படிப்பு கைநழுவிய பிரதீபா வேதனை
பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று, நீட் தேர்வில் 200 மதிப்பெண் பெற்ற பிரதீபாவிற்கு மருத்து படிப்பு கை நழுவியுள்ளது.
திருநெல்வேலி: நீட் தேர்வினால் நெல்லை மாவட்டம் இட்டாமொழி கிராமத்தைச் சேர்ந்த மாணவிக்கு மருத்துவ படிப்பு கனவாகியுள்ளது. ப்ளஸ் 2வில் 1176 மதிப்பெண் பெற்ற அந்த மாணவி, நீட் தேர்வில் 200 மதிப்பெண் பெற்றுள்ளார்.
பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத காரணத்தால் அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியவர் அனிதா. அனிதாவின் மரணம் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க இன்று ஒரு தாயும், மகளும் வேதனையோடு காத்திருந்தனர். அந்த மாணவியின் பெயர் பிரதீபா என்பதும், பிளஸ் 2வில் 1176 மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வு காரணமாக மருத்துவ வாய்ப்பு பறிபோனதும் தெரியவந்தது.
இட்டமொழி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீபா. 10ஆம் வகுப்பில் 495 மதிப்பெண் பெற்று உள்ளார். அதனைத் தொடர்ந்து பிளஸ் டூ தேர்வில் தமிழ் மொழியில் படித்து 1176 மதிப்பெண் பெற்றுள்ளார். 197.50 கட்ஆப் மதிப்பெண் பெற்ற அவரால் நீட்தேர்வில் 200 மதிப்பெண் மட்டுமே பெற முடிந்துள்ளது. இதனால் அவரது மருத்துவக் கனவு தகர்ந்தது.
பொறியியல் படிப்பிற்கோ, வேறு எந்த கல்லூரிக்கோ விண்ணப்பிக்காமல் விட்டு விட்டார். தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. பணம் செலவு செய்து படிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ளார் பிரதீபா.