ஊத்தி மூடப்படும் திருப்பூர் துணி ஆலைகள்… வளரப் போகுது ஒடிஷா- கவிழும் தமிழகம்: எச்சரிக்கை ரிப்போர்ட்
தமிழகத்தில் உள்ள திருப்பூர் துணி ஆலைகள் ஒடிஷா மாநிலம் செல்ல உள்ளது. இதனால் தமிழகத்தில் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
சென்னை: ஒடிஷா மாநிலம் ராம்தாஸ்ப்பூர் பகுதியில் மிகப்பெரிய தொழில் நகரை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.
மொத்தம் 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ள இந்த தொழில் நகரத்தில் ஜவுளி பூங்கா அமைக்க 70 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராம்தாஸ்பூர் ஜவுளிப் பூங்காவில் துணி ஆலைகளை அமைக்க திருப்பூரைச் சேர்ந்த 10 நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் தமிழகத்திற்கு பெரும் நஷ்டம் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொட்டும் சலுகைகள்
ஒடிஷாவில் தொழில் தொடங்கும் தமிழக நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. ராம்தாஸ்ப்பூர் ஜவுளிப்பூங்காவில் துணி ஆலைகளை அமைப்பதற்கான கட்டுமானச் செலவுகள் மற்றும் பொது வசதிகளுக்கான செலவுகளில் 60 சதவீதம் மானியமாக ஒடிஷா அரசு வழங்குகிறது.

வட்டியில்லாக் கடன்
அதே போன்று புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்ய 25 சதவீதம் மானியம் வழங்கவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மூலதனத்திற்காக ஒரு கோடி ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசே ஊதியம் வழங்க முடிவு
இது தவிர துணி ஆலை ஒன்றில் 200 தொழிலாளர்களுக்கும் மேல் பணியில் சேர்க்கப்பட்டால் அவர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியை ஒடிஷா அரசே வழங்க உறுதி அளித்துள்ளது. மேலும், பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 220 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்துள்ளது.

அபாயம்
திருப்பூர் நகரத்திலிருந்து மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.35,000 கோடி மதிப்புள்ள ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கிருந்து முக்கியமான 10 நிறுவனங்கள் ஒடிஷா மாநிலத்திற்கு சென்றால் தமிழக ஜவுளித் தொழில் பெரிய அளவில் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

ஊத்தி மூட..
ஒடிஷா மாநிலத்தில் இருந்து திருப்பூர் வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் அதிகம். இங்கிருக்கும் ஆலைகள் ஒடிஷாவிற்கு சென்றால் இந்தத் தொழிலாளர் முழுவதும் ஒடிஷாவிற்கே திரும்பும் நிலை உருவாகும். இதனால் திருப்பூரில் நடந்து வரும் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்படும்.

ஜவுளி தொழில் அழியும் அவலம்
தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜவுளி ஆலைகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும், சலுகைகளையும் தமிழக அரசு வழங்கி அந்தத் துறையை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனை உணராமல் தமிழக அரசு செயல்படுவதால் திருப்பூரில் உள்ள ஜவுளி ஆலைகள் திருப்பூருக்கு மாற்றம் பெறும் அவலம் உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொழிலை காக்க..
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஜவுளி ஆலைகள் இடம் பெயராமல் இருக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நிறுவனங்கள் தமிழகத்தில் இருந்து சென்றது போன்றே பணம் கொட்டும் ஜவுளித் துறையும் இடம் பெயர்ந்தால் தமிழ் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று தொழில் துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
அதிமுகவில் இருக்கும் உட்கட்சி பூசல், நாற்காலி சண்டைக்கிடையில் ஜவுளி பிரச்சனையை பார்க்குமா தமிழக அரசு?












Click it and Unblock the Notifications