பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை: சட்டசபையில் திமுக- அதிமுக கடும் வாக்குவாதம்
சென்னை: பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் சட்டசபையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழக அரசின் நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. இதில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை மீண்டும் தொடங்கியது.
சட்டசபை உறுப்பினர்கள் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 5 பேருக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் அமைதி காத்தனர். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்தை தொடங்கி சபாநாயகர் பேசினார். அப்போது திமுக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச அனுமதி கோரினார்.
ஸ்டாலின் பேச அனுமதி
சபாநாயகர் ஸ்டாலினை பேச அனுமதித்ததைத் தொடர்ந்து ஸ்டாலின் பேசினார். ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்தை தங்களிடம் அளித்திருந்தேன். இது தொடர்பாக பேச வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.
திமுகவினர் எதிர்ப்பு
இதில் குறுக்கிட்ட சபாநாயகர், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதற்கு பாதகமாக பேச வேண்டாம் எனக் கூறினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கூச்சலிட்ட திமுக எம்.எல்.ஏக்கள்
சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு, திமுக உறுப்பினர்களை அமரும்படி கூறினார். ஆனால் திமுக உறுப்பினர்கள் ஸ்டாலினை பேச அனுமதிக்குமாறு கூச்சல் போட்டனர். திமுக உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என்று கூறி, ஸ்டாலினை மீண்டும் பேச சபாநாயகர் அழைத்தார்.
பாலாறு பயணம்
சட்டசபையில் ஸ்டாலின் தொடர்ந்து பேசினார். கர்நாடகா மாநிலத்தில் பாலாறு தோன்றி 93 கி.மீ. கர்நாடகத்தில் பயணித்து ஆந்திர மாநிலத்தில் நுழைந்து அங்கேயும் 33 கி.மீ. பயணித்து தமிழகத்தில் 222 கி.மீ. பாய்ந்து சென்று இறுதியாக வங்க கடலில் கலக்கிறது. பாலாறை பொறுத்தவரை பெரும்பாலும் தமிழகத்தில்தான் பயணிக்கிறது. இதனால் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் பயனடைகின்றன.
விவசாயிகளின் நீராதாரம்
திருவள்ளூர், சென்னை மாவட்டங்களிலும் மிகப்பெரிய நீராதாரமாக இந்த பாலாறு உள்ளது. மேலும் 4000 ஏக்கர் விவசாயத்தை நம்பி தமிழக விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் கல்பாக்கம் அணுமின் நிலையம் பாலாற்றை நம்பிதான் உள்ளது.
மதராஸ் - மைசூர் ஒப்பந்தம்
1982 ஆம் ஆண்டு மதராஸ் - மைசூர் ஒப்பந்தத்தின்படி அட்டவணை-7-ல் குறிப்பிட்டது போல பாலாறு பாய்ந்து செல்லும் மாநிலங்களுக்கிடையே எந்த ஒருவித முன் அனுமதியும் இன்றி புதிய அணை கட்டுவதோ, அணை தொடர்பான கட்டுமான பணி மேற்கொள்வதோ, நீரை தேக்குவதோ, திருப்புவதோ இது போன்ற செயல்களில் ஈடுபட ஆந்திர அரசால் ஈடுபட முடியாது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த ஒப்பந்தத்தை மீறி ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் பணியை கடந்த 2006ம் ஆண்டே மேற்கொண்டது. அப்போது ஆட்சியில் இருந்த நீங்கள் 10.02.2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தீர்கள். அதன் பின்னர் மே 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சி வந்தது என ஸ்டாலின் பேசினார்.
ஒபிஎஸ் விளக்கம்
அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு ஸ்டாலினை ஒரு நிமிடம் அமரும்படியும், அவை முன்னவர் இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வத்தை பேச அழைத்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திமுகவினர் முழக்கம்
சட்டசபையில் எழுந்து நின்று திமுக உறுப்பினர்கள் அனைவரும் எதிர்க்கட்சி தலைவரை பேச விடு என கோஷங்களை எழுப்பினர். ஆனால் சபாநாயகர் தொடர்ந்து அனுமதி மறுத்ததுடன், அவை முன்னர் பேசிய பின்னர் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
இதனை ஏற்க மறுத்த திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
கடும் அமளி
தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பியபடி இருந்தால் அவை முன்னவர் ஓ. பன்னீர் செல்வம் பேச முடியாமல் சட்டசபையில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி, துரைமுருகன் திமுக உறுப்பினர்களை அமரும்படி கூறிய போதும் ஸ்டாலினை பேச அனுமதித்தால் மட்டுமே அமருவோம் என்று கூறினர்.
சபாநாயகர் உறுதி
இதனிடையே, சபாநாயகர் குறுக்கிட்டு என்னை சபை நடத்த நீங்கள் வழிகாட்ட முடியாது. சட்ட விதிகளுக்கு முற்பட்டே சபையை நடத்துவோம். இல்லையேல் நீங்கள் எவ்வளவு கூச்சல் போட்டாலும், கத்தினாலும் என்னுடைய முடிவில் மாற்றம் கிடையாது.
20 நிமிடங்கள் கடும் அமளி
அவை முன்னர் பேசிய பின்னரே எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிப்பேன் என்றார். சுமார் 20 நிமிடம் இதுபோன்ற காரசார விவாதத்தை தொடர்ந்து சபாநாயகரிடம் துரைமுருகன், சக்கரபாணி ஆகியோர் சென்று ஸ்டாலினை பேச அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
மீண்டும் சபாநாயகர் ஸ்டாலின் பேச அனுமதி தருகிறேன். ஆனால் அவை முன்னர் பேசி பின்னரே பேச அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்.
சபாநாயகர் எச்சரிக்கை
எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணை தலைவர், கொறடா ஆகிய 3 பேர் கூறியும் திமுக உறுப்பினர்கள் கட்டுப்பட மறுக்கிறீர்கள். நீங்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளீர்கள் என்றே தெரியவில்லை என்று சபாநாயகர் கூறியதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
கட்டுப்பட மறுப்பதா?
இதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் நான் தவறுதலாக எதுவும் கூறவில்லை. ஒன்று உறுப்பினர் என்ற அடிப்படையில் எனக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும். இல்லை என்றால் கொறடா அல்லது எதிர்க்கட்சி தலைவருக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் உங்கள் தலைவருக்கும், எனக்கும் கட்டுப்பட மறுக்கிறீர்கள் என்பதால் அவ்வாறு கூறினேன் என்றார். இதை தொடர்ந்து துரைமுருகன் எழுந்து நின்று திமுக உறுப்பினர்களை சமாதானப்படுத்தி அமர வைத்தார்.
கண்டன தீர்மானம்
தொடர்ந்து பேசிய ஸ்டாலின் பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு தடுப்பணை உயரத்தை அதிகரித்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அல்லது அந்த மாநில முதல்வரை சந்தித்து பேசி சுமூக தீர்வு காண முயற்சிக்க வேண்டும். சட்டசபையிலும் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
சுமூகத் தீர்வு
சட்டசபையில் பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ராமசாமி, பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அணை கட்டிய விவகாரத்தில் அந்த மாநில முதல்-அமைச்சருடன் நமது முதல்வர் பேச வேண்டும். அல்லது சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் தலைமையில் சென்று பேசி சுமூக தீர்வு காண முயற்சிக்க வேண்டும். வழக்கு தொடர்ந்தால் அது நமது தலைமுறையை தாண்டி வழக்கு நடந்து கொண்டே தான் இருக்கும். கேரளா, ஆந்திரா மாநிலத்துடன் சுமூக உறவு வைக்க பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது என்றார்.
அமைச்சர் விளக்கம்
பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பணை கட்டிய விவகாரத்தில் ஏற்கனவே தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்ததால் கட்டுமான பணி தடுக்கப்பட்டது. தற்போது 9 அடி முதல் 12 அடி வரை தடுப்பணை உயர்த்தப்பட்டதால் 1-7-2016 அன்று ஆந்திரா முதல்வர் தமிழக முதல்வர் ஒரு கடிதம் எழுதி தமிழகத்தின் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். தடுப்பணையை பழைய நிலைக்கு கொண்டு வரவும் கேட்டுக் கொண்டார் என்று அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
நீதிமன்ற உத்தரவு
இந்த கடிதத்தை தொடர்ந்து 11-7-2016 அன்று தமிழக தலைமை செயலாளர் ஆந்திரா தலைமை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். மத்திய அரசும் ஆந்திரா அரசுக்கு இதில் உரிய உத்தரவை பிறப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்திலும் கடந்த 18ம்தி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலாற்றின் குறுக்கே எவ்வித தடுப்பணையும் கட்டக்கூடாது என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் கோர்ட்டு உரிய உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் கூறினார் அமைச்சர்.
துரைமுருகன் பேச்சு
ஆந்திர முதல்வர் தமிழகத்துடன் நட்பாக இருக்கக் கூடியவர். இந்த பிரச்சினையில் சுமூக தீர்வு காண அனைத்து கட்சி தலைவர்கள் 4 பேர் சென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பேசினால் அவரே ஒத்துக்கொள்வார். இதில் தமிழக முதல்வர் ஒரு குழுவை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினால் நிச்சயம் பயன் ஏற்படும் என்று திமுக உறுப்பினர் துரைமுருகன் கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்
பாலாறு தடுப்பணை விவகாரத்தில் 2006-ம் ஆண்டே வழக்கு போடப்பட்டது. அ.தி.மு.க. அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்தது. அதற்கு பிறகு தி.மு.க. ஆட்சி வந்தது உங்கள் ஆட்சியில் (தி.மு.க.) நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? நீங்கள் அப்போது இந்த பிரச்சினையை தீர்த்து இருந்தால் இப்போது பாலாறு பிரச்சினை இந்த அளவுக்கு வந்திருக்காது என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
கார சார விவாதம்
இதற்கு பதிலளித்த துரைமுருகன் அப்போது இந்த அளவு அணை கட்டவில்லை. நாங்கள் சொன்னதும் நிறுத்தி விட்டார்கள் என்று கூறினார். சட்டசபையில் இன்று பாலாறு அணை கட்டும் விவகாரத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.