காவிரி.. எல்லாம் முடிஞ்சு போச்சு.. இப்பப் போய் டெல்லிக்குக் குழு அனுப்பும் தமிழக பாஜக #cauvery
சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எந்த அளவுக்கு துரோகம் செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு எல்லாம் நடந்து, தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது போய் தமிழகத்திலிருந்து பாஜக சார்பில் ஒரு குழு டெல்லி போய் பிரதமரைச் சந்திக்கப் போகிறதாம்.
இதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதிலும், காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதிலும் தமிழக பாஜ உறுதியாக உள்ளது. காவிரியில் நமது உரிமையை நிலை நாட்டுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து ஓர் அறிக்கை தயார் செய்துள்ளோம்.
இதை எங்கள் மத்திய தலைமைக்கும், சட்ட அமைச்சகத்துக்கும், நீர்வளத்துறை அமைச்சகத்துக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் சமர்ப்பிக்க உள்ளோம். பிரதமரையும், அமைச்சர்களையும் சந்திக்க உள்ளோம். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் நான், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷணன், தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
முக்கியமான நேரத்தில் வாயை மூடி பேசாமல் இருந்தது தமிழக பாஜக. கர்நாடகத்தில் கலவரம் தலைவிரித்தாடியபோது எந்த தமிழக பாஜக குழுவும் டெல்லி போகவில்லை. வழக்கு உச்சத்தில் இருந்தபோதும் யாரும் போகவில்லை. உமா பாரதியை கர்நாடக குழு அடுத்தடுத்து சந்தித்தபோதும் இங்கிருந்து யாரும் போகவில்லை.
கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய பாஜக அமைச்சர்களான சதானந்த கெளடா, அனந்த்குமார் மற்றும் நிர்மலா சீதாராமன் போன்றோர் உமா பாரதியைப் பிடித்து கர்நாடகத்திற்குச் சாதகமாக தொடர்ந்து பேசியபோதும் தமி்ழக பாஜகவிலிருந்து யாருமே அங்கு போகவில்லை. குறைந்தபட்சம் தமிழிசை கூட போய்ப் பார்க்கவில்லை. பொன். ராதாகிருஷ்ணன் எங்கே போனார் என்பதே தெரியவில்லை.
இந்த நிலையில் தமிழகத்திற்குப் பாதகமாக எல்லாம் முடிந்து போய் விட்ட நிலையில் இப்போது போய் யாருக்காக பிரதமரைப் பார்க்கப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. ஒரு வேளை நிச்சயமாக எங்களால் முடியும் என்று இவர்கள் அழுத்தம் திருத்தமாக கூறினால், அதை ஏன் முன்பே செய்யவில்லை என்பதற்கும் அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.