சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெ. அறிவிப்பு!
சென்னை: சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ9 ஆயிரத்தில் இருந்து ரூ10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று சென்னை கோட்டையில் தேசிய கொடியேற்றி உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
நாட்டின் 68 வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய சுதந்திர தின உரை:
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது. பகத்சிங் போன்ற தியாக வீரர்களால் சுதந்திரம் கிடைத்ததை எண்ணிப்பார்க்க வேண்டிய நாள் இன்று!.
பூலித்தேவன், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் என நாட்டின் சுதந்திரத்துக்காக பல்வேறு தலைவர்கள்- பல்வேறு வழிகளில் போராடி உள்ளனர். நாட்டின் சுதந்திரத்திற்காகப் போரிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை வணங்குகிறேன்.
இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதுதான் எனது இலட்சியம்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களின் உயிரை மாய்த்துக்கொண்ட அனைவருக்கும் வீர வணக்கம் செலுத்துகிறேன்.
சுதந்திரத்தைப் பெறுவது எளிது அதை பாதுகாப்பது கடினம், சுதந்திரத்தின் பயனை அனைவரும் பெரும் வகையில் அடையச் செய்வது அதைவிடக் கடினம். அதிமுக அரசு சுதந்திரத்தின் பயனை ஏழை எளியவர்கள் அனைவரும் பெரும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளது.
ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பார்கள். ஆனால் ஏழையின் சொல்தான் புனித ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும். ஏழை எளியவர்களை பாதுகாக்கும் அரசாக அவர்களை கைதூக்கிவிடும் அரசாக எனது அரசு செயல்பட்டு வருகிறது.
சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் பல்லாயிரக்கணக்கானோருக்கு ஓய்வூதியம், கறவைப் பசு, வெள்ளாடுகள், தாலிக்குத் தங்கம், ரூ.50000 நிதி உதவி, கேபிள் டிவி, அம்மா உணவகங்கள், குடிநீர், உப்புத்திட்டம் என சமுதாயத்தில் அடித்தட்டு மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விலையில்லா திட்டங்கள் மட்டுமல்லாது கல்விக்கு உயரிய முக்கியத்துவம் அளித்து ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒருவனுக்கு மீனைப் பிடித்துக் கொடுப்பதை மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு தொழில் பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சுதந்திரத்தின் பயன் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையச் செய்கிறது உங்கள் அன்பு சகோதரியின் அரசு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழினத்துக்காக, தமிழ் மொழிக்காக அல்லும்பகலும் பாடுபடுகிற தமிழக அரசு. சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ9 ஆயிரத்தில் இருந்து ரூ10ஆயிரமாக உயர்த்தப்படும்
சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ4,500ல் இருந்து ரூ 5 ஆயிரமாக உயர்வு, விடுதலைப் போராட்ட வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ2 ஆயிரத்தில் இருந்து ரூ4 ஆயிரமாக உயர்த்தப்படும்.
அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் பலவகை கலவை சாதம், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணா நாமத்தின் படி நாட்டின் சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடும் இந்த திருநாளில் அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் வாழ்க
இதனைத் தொடர்ந்து துணிச்சலான செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. பொன்னிக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
முதல்வர் நல் ஆளுமைவிருது, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த சேவை விருது, மகளிர் நலனுக்கான சிறந்த தொண்டாற்றிய விருது, சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருது உள்ளிட்ட விருதுகளை உரியவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். பின்னர் விருது பெற்றவர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.