எஸ்சி, எஸ்டி மாணவர்கள் உதவித்தொகையை நிறுத்தக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
எஸ்.சி.,எஸ்.டி. மாணவர்களுக்கு உதவி தொகை நிறுத்தக்கூடாது என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் கல்வி பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்லூரி உதவித் தொகையை நிறுத்தக்கூடாது என்றும் அதனை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
பொதுவாக, கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அரசு உதவி தொகையை வழங்கும். ஆனால் அத்தகைய உவித்தொகை வழங்கப்படாது என்று சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கல்வி உதவித்தொகை மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் பலனடைந்து கல்லூரி படிப்பை தொடர்ந்து வருவதாகவும், அதனால் மேல்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் கல்வி உதவிதொகையை நிறுத்தினால், உயர்கல்வி, மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் கடிதத்தில் கூறியுள்ளார்.
எனவே எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை குறைக்காமல் வழங்கும் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முதல்வர், உதவித்தொகை விதிகளில் மாற்றம் கொண்டுவரக் கூடாது என்றும் விதிகளில் மாற்றத்தை திரும்பபெற வேண்டும் என்றும் கோரிக்கையாக விடுத்துள்ளார். மேலும் கல்வி உதவித்தொகையில் நிலுவை தொகையாக உள்ள ஆயிரத்து 803 கோடியே 50 லட்சம் ரூபாயையும் உடனடியாக விடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.