9 தொகுதி வேட்பாளர்களை அறிவித்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: தென்காசி- லிங்கம்; திருப்பூர்- சுப்பராயன்
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் தென்காசி, திருப்பூர் உட்பட 9 தொகுதிளுக்கான வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று அறிவித்துள்ளது. தென்காசி தொகுதியில் தற்போதைய எம்.பி. லிங்கம் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் இருந்து இடதுசாரிகள் வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்சியும் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இரு கட்சிகளும் தலா 9 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துவிட்டது.
இந்நிலையில் இன்று வேட்பாளர்கள் தேர்வு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா. பாண்டியன் 9 தொகுதி வேட்பாளர்களை அறிவித்தார்.
9 தொகுதிகளுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் விவரம்:
தென்காசி- லிங்கம் (சிட்டிங் எம்.பி)
திருப்பூர்- சுப்பராயன் (முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி)
நாகை- பழனிச்சாமி (முன்னாள் எம்.எல்.ஏ.)
தூத்துக்குடி- வழக்கறிஞர் மோகன்ராஜ்
புதுச்சேரி- விஸ்வநாதன் (முன்னாள் எம்.எல்.ஏ)
கடலூர்- கு. பாலசுப்பிரமணியன் (அரசுப் பணியாளர் சங்கம்)
சிவகங்கை- கிருஷ்ணன்
திருவள்ளூர்- ஏ.எஸ். கண்ணன்
ராமநாதபுரம்- உமா மகேஸ்வரி