நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்: ஸ்டாலின்
நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
கோவை: நீட் தேர்வெழுத வெளிமாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்ய முன்வர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
கோவையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மாணவர்களை வஞ்சித்து விட்டது. கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் போடப்பட்டுள்ளதால் மாணவர்களும் பெற்றோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், மொழி தெரியாத மாநிலங்களில் சென்று சிரமப்படும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மாநில அரசு உதவ முன் வர வேண்டும். விமான பயணக் கட்டணம், பெற்றோருடன் தங்குவதற்கான வசதி உள்ளிட்ட அனைத்தையும் தமிழக அரசு செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
ஏற்கனவே, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் தமிழக அரசு மாணவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.