ஈரோடு கோகோ கோலா ஆலைக்கு தமிழக அரசு தடை: ‘கத்தி’ பட பாணியில் போராடிய விவசாயிகளுக்கு வெற்றி
ஈரோடு: விவசாயிகளின் தொடர் போராட்டங்களை தொடர்ந்து, ஈரோடு பெருந்துறையில் கோகோ கோலா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட, தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கோகோ கோலா நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக அந்நிறுவனத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், கோகோ கோலா நிறுவனத்துக்கு தமிழக அரசு இடம் ஒதுக்கியிருந்தது. பெருந்துறை தொழில் வளர்ச்சி மையத்தில் சுமார் 71.3 ஏக்கர் நிலம் அந்நிறுவனத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு ரூ.500 கோடி செலவில் குளிர்பானங்கள், பழச்சாறுகள், குடிநீர் போன்றவற்றைத் தயாரிக்கும் ஆலையை நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. தினமும், 30 லட்சம் லிட்டர் தண்ணீரை, மிகக் குறைந்த விலையில் அரசிடம் பெற்று, திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அந்த இடத்தில் தொழிற்சாலை அமைத்தால் ஏராளமான நிலத்தடி நீரை அந்நிறுவனம் உறிஞ்சும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். அது மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும், சில கட்சிகளும், கோகோ கோலோ நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். ஆலை அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் 99 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விவசாயிகளின் அச்சம்
71 ஏக்கர் நிலத்தில் கம்பெனி தொடங்கப்பட்டால், மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் கெட்டுவிடும். மண்ணும், காற்றும் மாசுபடும் என்பது விவசாயிகளின் அச்சமாகும். எனவே பெருந்துறையில் தொடங்க அனுமதி கொடுக்காமல், தடை செய்ய வேண்டுமென அரசுக்கு மனு கொடுத்த கையோடு விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். கத்தி பட பாணியில் விவசாயிகள் பலவிதங்களில் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
நிறுவனம் உறுதி
ஆனால், அதற்கு கடந்த மார்ச் மாதத்தில் விளக்கம் அளித்த அந்நிறுவனத்தினர், தாங்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும், பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரித்த பிறகே வெளியேற்றுவோம் எனவும் உறுதியளித்தனர். மேலும், அந்த ஆலைக்குத் தேவையான தண்ணீரை தமிழக தொழில்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தங்களுக்கு நிலத்தை ஒதுக்கிய சிப்காட் நிறுவனத்தின் மூலமாகப் பெற்றுக் கொள்வோம் என்றும் தெரிவித்திருந்தனர்.
சட்டப்பேரவையில் பிரச்சினை
இதற்கிடையே, பெருந்துறையில் கோகோ கோலா நிறுவனத்துக்கு இடம் அளிக்கப்பட்டது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையிலும் சமீபத்தில் பிரச்னை எழுப்பப்பட்டது.
தமிழக அரசு தடை
இதனையடுத்து கோகோ கோலா கம்பெனி, கேரளா மாநிலம் பிளாச்சிமடம் என்ற இடத்தில் தொடங்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம், சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களின் கடும் எதிர்ப்பால், நீதி மன்றம் தடை செய்தது. இந்நிலையில், பெருந்துறை சிப்காட்டில் குளிர்பான ஆலை அமைக்க தமிழக அரசு தடை விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தமிழக அரசு நோட்டீஸ்
இந்நிலையில், கோகோ கோலா நிறுவனத்துக்கு சிப்காட் சார்பில் நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அது குறித்து தொழில்துறை அதிகாரிகள் கூறுகையில், "தங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டும் இதுவரை பணிகளைத் தொடங்கவில்லை. அதனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட நிலத்தை ஏன் நாங்கள் திரும்பப் பெறக்கூடாது?" என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகளின் நலன்
இதுகுறித்து கருத்து கூறியுள்ள சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், "ஏற்கெனவே கெயில் திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது, அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கெயில் திட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார். அதேபோல, தற்போது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பெருந்துறை சிப்காட்டில் குளிர்பான ஆலை அமைக்கத் தடை விதித்துள்ளது' என்று கூறியுள்ளார்.
விரட்டப்பட்ட ஆலை
தமிழகத்தில், சிவகங்கை மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியிலும் கம்பெனி தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு, மக்கள் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. உ.பி.,மாநிலம், வாரணாசி பகுதியில் தொடங்கப்பட்டு, மக்கள் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.