தமிழக அரசின் மணல் குவாரி விழுப்புரத்தில் தொடக்கம்... யூனிட் மணல் ரூ.525 க்கு விற்பனை
தமிழக அரசே நடத்தும் மணல் குவாரி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கோண்டூரில் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட் மணல் ரூ.525க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விழுப்புரம்: தமிழக ஆறுகளில் நடக்கும் தாறுமாறான மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் தமிழக அரசே மணல் குவாரி நடத்தும் என்று அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் முதல் மணல் குவாரியை தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணையாற்றின் கீழக்கோண்டூரில் தொங்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரி குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் இருந்த 9 மணல் குவாரிகளை அண்மையில்தான் அரசு மூடியது. தனியார் மணல் எடுக்கும் கம்பெனியினர் பல நூறு அடிகள் ஆழம் வரை மணல் எடுத்து, ஆறுகளை பாலைவனமாக மாற்றிவந்தனர். இந்த நிலையில் பொதுமக்களும் அங்கங்கே போராட்டங்கள் நடத்திவந்தனர்.
மணல்கொள்ளை தமிழக அரசுக்கு தலைவலியைக் கொடுத்தது. இதனையடுத்து கொள்ளையைத் தடுக்கும் வகையில் அரசே மணல் விற்பனையை முறைப்படுத்த திட்டமிட்டது. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், கீழக்கோண்டூர் தென் பெண்ணையாற்றில் மணல் குவாரி அரசு அமைத்துள்ளது. அதில் ஒரு யூனிட் மணல் ரூ.525 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 250 லாரிகளுக்கு மட்டும்தான் மணல் வழங்கப்படும். காலை 7 மணி முதல்,மாலை 6 மணி வரையில்தான் மணல் இங்கே விற்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.