முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை
தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக தமிழக அரசு உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து அதை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்க ஆயத்தமாகி வருகிறது.
விரைவில் ஒரு அரசாணையைப் பிறப்பித்து அதன் பின்னர் 142 அடியாக அணையின் நீர்மட்ட அளவை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
முல்லைப் பெரியாறு அணையின் ஒரிஜினல் அதிகபட்ச முழுக் கொள்ளளவானது 155 அடியாகும். ஆனால் அணை பலவீனமாகி விட்டதாக கேரளா கூறிக் கூறியே அதை 136 அடியாக்கி விட்டது. இதற்காக ஒரு சட்டத்தையும் கொண்டு வந்து அடாவடித்தனம் செய்தது.
தற்போது கேரளாவின் சட்டத்தைத் தூக்கி குப்பைக் கூடையில் போட்டு விட்டது உச்சநீதிமன்றம். தமிழகம் அங்கு 142 அடி வரை நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம். அணை பராமரிப்பையும் மேற்கொள்ளலாம் என்றும் கூறி விட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான முஸ்தீபுகளை தமிழக அரசின் பொதுப்பணித்துறை முடுக்கி விட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். அதன் பின்னர் 136 அடி வரையில் உள்ள ஷட்டர்கள் 142 அடிக்கு உயர்த்தப்படும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நகல் கைக்கு வந்தவுடன் இந்த வேலைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
ஒருவேளை இதை செய்வதற்கு கேரளத் தரப்பில் இடையூறு ஏற்படுத்தப்பட்டால் ராணுவத்தின் உதவியைக் கோரி உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகலாம் என்றும் பேசப்படுகிறது.