பொன்னார், தமிழிசைக்கு 'வாய் சவடால் வீரர்கள்' பட்டம்தான் பொருத்தம்! #jallikattu
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை; ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று பேட்டி கொடுத்த பொன்னார், தமிழிசை மீதுதான் தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
சென்னை: ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு கண்டிப்பாக நடைபெறும் என வாக்குறுதி கொடுத்தே தமிழக மக்களை ஏமாற்றிவிட்டனர் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
விமான நிலையங்களில் மைக் கிடைத்தால் போதும்... இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என்று சொல்லி வந்தனர் பொன். ராதாகிருஷ்ணனும் தமிழிசை சவுந்தராஜனும். தற்போது ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடியாது என கைவிரித்துவிட்டது.
தேவை அரசாணைதான்
இதனால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் காட்சிபடுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கும் அரசாணை பிறப்பித்தாலே பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்.
திராணியற்ற பாஜக
ஆனால் இதை செய்ய திராணியற்ற பாஜகவினர், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது; மத்திய அரசு கண்டிப்பாக நடத்த நடவடிக்கை எடுக்கும் என்று 2 ஆண்டுகாலமாக வாக்குறுதிக்கு மேல் வாக்குறுதிகளாக கொடுத்து வருகின்றனர். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை.
சவடால் வீரர்கள்
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் தேவை என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாக இருக்கிறது. ஆனால் இப்போதும் மத்திய அரசுக்கு எதிராக போராட கூடாது; நான் மத்திய அமைச்சர் என்பதால் போராட முடியவில்லை என வாய்ஜாலம் காட்டுகிறார் பொன் ராதாகிருஷ்ணன். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்கிறார் தமிழிசை சவுந்தராஜன். வாய் சவடால் வீரர்கள் தாங்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றனர் பொன்னார், தமிழிசை வகையறாக்கள்.
உங்க மீதுதான் கோபம்
தடையை மீறி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த மக்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்... ஆனால் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜகவினர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்க வலியுறுத்தாமல் 'இருப்பை காட்டிக் கொள்வதற்காக' பேசியே காலத்தை கடத்தி விட்டனர். தமிழகத்தின் கோபம் மத்திய பாஜக அரசு மீது என்பதைவிட அக்கறையே காட்டாமல் வாக்குறுதிகளை அள்ளிவிட்ட பொன்னார், தமிழிசை வகையறாக்கள் மீதுதான்.
துரோகத்துக்கு தயங்காத பாஜக
தமிழகத்துக்கு துரோகம் செய்வதற்காக உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மீற தயங்கியதில்லை மத்திய பாஜக அரசு. ஆனால் தமிழகத்தின் உயிர்நாடி விவகாரங்களில் சப்தநாடிகளையும் அடக்கி வைத்துக் கொண்டு சட்டாம்பிள்ளைத்தனம் பேசுகிறது பாஜக கோஷ்டி. தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி இதுபோன்ற தொடர் துரோகங்களால் எத்தனை குட்டி கரணம்போட்டாலும் தமிழகத்தில் காலூன்றவே முடியாது என்பதுதான் யதார்த்தம்.