எல்லைமீறும் நாற்காலி யுத்தம்... அதிமுக நிலை குறித்து காங். தலைவர் திருநாவுக்கரசர் கவலை
அதிமுகவில் தினமும் நடக்கும் நற்காலி யுத்தம் இப்போது எல்லை மீறிப் போகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கவலை தெரிவித்துள்ளார்.
சென்னை : தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் நாள்தோறும் நடைபெற்று வரும் நாற்காலி யுத்தம், மோதல்கள் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கின்றன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் உள்குத்து மோதல்கள் அதிகரித்துள்ளது. சசிகலா அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓபிஎஸ் அணி என்று மாறிமாறி வரும் செய்திகள் அதிமுகவை கலகலக்க வைத்துள்ளது. இது அக்கட்சியின் சரிவைக் காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர், " வரலாறு காணாத வறட்சியின் காரணமாகவும், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததாலும், காவிரி டெல்டாவில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை தமிழகம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
விவசாயிகள் தற்கொலை
விவசாய வருமானம் வீழ்ச்சியடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்கொலை சாவுகள் இருநூறுக்கும் மேல் சென்று கொண்டிருக்கின்றன. இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
சரிவில் தமிழகத் தொழில் துறை
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 2011-12ல் 12.5 சதவீதமாக இருந்தது. 2016-17ல் 1.64 சதவீதமாக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதே ஆண்டில் அண்டை மாநிலங்களான ஆந்திர மாநிலத்தின் தொழில் வளர்ச்சி 10.36 சதவீதமாகவும், தெலுங்கானா மாநிலத்தின் வளர்ச்சி 7.1 சதவீதமாக உயர்ந்து வருகிறது.
அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிறுவனங்கள்
ஆந்திர மாநில பிரிவினையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து தங்களை மீட்டுக் கொண்டு, தங்கள் மாநிலத்தை அந்தந்த மாநில முதல்வர்கள் வளர்ச்சிப் பாதையில் அழைப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள். இதனால் தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டியவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
புஸ்வானமான முதலீட்டாளர்கள் மாநாடு
உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.26 ஆயிரத்து 615 கோடி முதலீடுதான் வந்துள்ளதாக சட்டசபையில் அமைச்சர் கூறியிருக்கிறார். ஆக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு வான வேடிக்கையாக நடத்தப்பட்டு இன்றைக்கு புஸ்வானமாக மாறியிருக்கிறது. இதற்கான பொறுப்பை இன்றைய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தான் ஏற்க வேண்டும்.
நாற்காலி யுத்தம்
தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி என்றாலே ஊழல் ஆட்சி என்ற அழிக்க முடியாத களங்கத்தை பெற்றிருக்கிறது. அக்கட்சிக்கு யார் தலைவர்? ஆட்சிக்கு யார் முதல்வர்? என்கிற நாற்காலி யுத்தம் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. மோதல்கள் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கின்றன." என்று கூறியுள்ளார்.