ஆஞ்சனேயர் தலையில் நெய் வடிவதாக பரபரப்பு... நடந்தது என்ன?
மதுரை: மதுரையில் உள்ள ஒரு கோவிலில் வைக்கப்பட்டுள்ள ஆஞ்சனேயர் சிலையின் தலையிலிருந்து நெய் வடிவதாக பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாகிகள் அங்கு சென்று நடந்தது என்ன என்பதைக் கண்டறிந்து அதற்கு விளக்கமும் அளித்துள்ளனர்.
மதுரை, கிருஷ்ணாபுரம் காலனிக்குச் செல்லும் வழியில் உள்ள பாரதிநகர் என்ற இடத்தில் மங்கள விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுமார் ஒன்றை அடி ஆஞ்சனேயர் சிலை உள்ளது. கோவிலின் உள்ளே சிறிய உட்கட்டிடத்தில் இந்த கல் சிலை உள்ளது. இச்சிலையின் தலையின் மேல் கடந்த 21 நாட்களுக்கு மேல் கட்டியான நெய் உருவாகிறது என்று பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பலரும் வந்து என்ன இது ஆச்சரியம் என்று பார்த்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று நட்பது என்ன என்பதை நேரில் பார்த்து அறிந்து அதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மதுரை மாவட்ட கிளை சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்த விளக்கம் இதோ...
கிருஷ்ணாபுரம் காலனி செல்லும் வழியில் உள்ள பாரதிநகர் நகரில் மங்கள விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுமார் ஒன்றை அடி ஆஞ்ஜனேயர் கல்சிலை ஒரு மிகச்சிறிய உட்கட்டிடத்தில் உள்ளது. இச்சிலையின் தலையின் மேல் கடந்த 21 நாட்களுக்கு மேல் கட்டியான நெய் உருவாகிறது என்று செய்தி பரப்பபட்டு உள்ளது.
இதனை அறிந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாவட்டச்செயலர் எம்.பாண்டியராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அக்கோவிலுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனர். அதன் விபரம் பின்வருமாறு:
அங்கு வழிபாட்டில் இருந்த அனைத்துத் தரப்பினரும் இது கடவுளின் அற்புதம் என நம்புகின்றனர். இவர்கள் அனைவரும் மத்தியதர வர்க்கத்தினர் எனபது குறிப்பிடத்தக்கது. மருத்துவர் முதல் வங்கி மேனேஜர் வரை இதில் அடங்குவர். ராணுவத்திலிருந்து வந்துள்ள ஒருவர் மட்டும் இது ஒரு ஜோடிப்பு என்றார்.
சிலையின் அருகில் சென்று பார்த்த போது ஆஞ்சனேயர் தலையில் சிறிய அளவில் கட்டியான நெய் இருந்தது. இந்த நெய் காலை எட்டுமணியளவில் சில அபிஷேகங்கள் செய்த பின்னர் உருவாகிறது என்றும் அது பின்னர் உடல் முழுவதும் பரவுகிறது என்று அதன் கோவில் அர்ச்சகர் கூறினார். எட்டரை மணிக்குப்பிறகு அச்சிலை பூட்டப்பட்டு அடுதத நாள் திறக்கப்படுகிறது.
சிலையின் அருகில் சென்று பார்த்த பொழுது நெய்யின் ஒரு பகுதியில் கைரேகை இருப்பது தெரியவந்தது. எனவே அர்ச்சகர் அபிஷேகங்கள் செய்யும் போது கட்டி நெய்யைத் தடவி விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதில் கைரேகை இருப்பது ஓர் ஆதாரமாகும்.
சிலை இருப்பிடம் மிகச் சிறியதாக இருப்பதால் அர்ச்சகர் அபிஷேகம் செய்யும் பொழுது சிலை முழுவதும் அவரது உடலால் மறைக்கப்படுவதால் அவர் என்ன செய்கிறார் எனபது முன்னால் இருக்கும் யாருக்கும் தெரியாது.
மேலும் கடந்த பலவருடங்களாக புகைப்பட எடுக்கப்பட்டு வந்த இந்த சிலையை த்ற்பொழுது புகைப்படம் எடுக்கக்கூடாது என அனுமதி மறுத்தனர். அதற்கான போர்டும் தற்போது தொஙகவிடப்பட்டுள்ளது. இது சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
மேலும் அறிவியல் ரீதியாக பார்த்தோமானல் எந்தப்பொருளும் காற்றில் இருந்தோ வெற்றிடத்தில் இருந்தோ வரமுடியாது. எனவே கட்டியான நெய், நெய்யில் இருந்து தான் வந்திருக்க வேண்டும். இதில் எந்தவிதமான அற்புதமும் கிடையாது.
நெய்யை அர்ச்சகரே தடவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் இந்தக்கோவிலின் அர்ச்சகர் இக்கோவிலைப் பிரபலப்படுத்த செய்யும் தந்திரம் என்று கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..