உடல் சூட்டை தணிக்கும் கேழ்வரகு கூழ்... தகிக்கும் வெப்பத்தை தகர்க்க பெஸ்ட் சாய்ஸ்!
சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து நமது உடல் உறுப்புகளை பாதுகாத்துக் கொள்ள உடல் சூட்டை தணிக்கும் வகையிலான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
சென்னை: கோடைக் காலம் வருவதற்கு முன்பே தகித்து வரும் வெப்பத்தை தணிக்க அரிசி வகை உணவுகளை தவிர்த்து விட்டு கேழ்வரகை உட்கொண்டால் உடலுக்கு சற்று குளிர்ச்சியை தரும்.
வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சியை சந்தித்து வருகிறோம். கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே வெயில் வாட்டி எடுக்கிறது.
ஏரிகள், குளங்கள், என நீர்நிலைகள் அனைத்தும் வறண்டுவிட்டன. சென்னைக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய நாள்களுக்கே தண்ணீர் கிடைக்கும் என்று பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
கோடை வெயில்
பொதுவாக கோடை வெப்பத்தால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நமது நீர் சத்தை வெப்பம் உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் வெளியே செல்லும் மக்கள் வெயிலுக்கு இதமான உணவுகளை வாங்கி உண்பர்.
அதிக நீர் சத்துடைய காய்கறிகள்
கீரைகள், முள்ளங்கி, சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்களையும், தர்பூசணி, எலுமிச்சை, கமலா ஆரஞ்ச், சாத்துக்குடி, கிர்னி பழம் உள்ளிட்ட பழங்களை உண்டு உடல் வெப்பத்தை தகித்து கொள்ளலாம். மோர், பானகம், வெந்நீர், பழச்சாறுகள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது உட்கொள்ளுங்கள்.
கூலிங் வாட்டரை தவிருங்கள்
வெயிலின் தாக்கத்தை தாள முடியாத பலர் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்ட தண்ணீரை அருந்துவர். இதனால் அவர்களது தாகம் அடங்கும், ஆனால் உடல் உஷ்ணம்தான் கூடும். எனவே வெந்நீரை குடிக்க பழகுங்கள். சீரகம் போட்டு கொதிக்க வைத்த நீரையும் அருந்தலாம்.
கேழ்வரகு கூழ்
கிராமப்புறங்களில் மக்கள் வெயில் காலம் வந்ததும் கேழ்வரகு கூழ், கம்பங் கூழ் உள்ளிட்டவற்றை செய்து அருந்துவர். சாம்பார், ரசம், காரக்குழம்பு என்பதற்கு பதிலாக இதுபோன்று கேழ்வரகை கூழாகவோ கஞ்சியாகவோ அருந்துங்கள். உடலுக்கு ஏற்றது.
சத்துகள்
கேழ்வரகில் கால்சியம், நல்ல கார்போஹைட்ரேடுகள், அமினோ அமிலங்கள், வைட்டமின் டி உள்ளிட்டவற்றுடன் மிகவும் முக்கியமான நார் சத்துகள் உள்ளன. இதை நாம் பயன்படுத்தினால் உடல் எடை குறைவதோடு, உடல் உஷ்ணத்தையும் குறைக்கும். மேலும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களின் எலும்புகள் பலம்பெறும்.
உடல்பாதிப்புகள்
வெயிலினால் நமது உடலின் நீர் சத்துகள் உறிஞ்சப்படுவதோடு அம்மை நோய்கள், கட்டிகள், வேர்குரு, மயக்கம், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளிட்டவை ஏற்படும். இவற்றிலிருந்து நமது உடலை பாதுகாக்க அதிகமான நீரை உட்கொள்வதும் , வெப்பத்தை தணிக்கும் உணவுகளை உட்கொள்வதும் அவசியமாகும்.