கடைசி நாளில் சூறாவளி பிரசாரம் செய்த தமிழக அரசியல் தலைவர்கள்! யார் யார் எங்கே தெரியுமா?
சென்னை: கடந்த ஒரு மாத்துக்கும் மேலாக நடந்து வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையோடு நிறைவடைந்தது.
இன்று கடைசி நாள் பிரச்சாரத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் பிஸியாக இருந்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதிவரை நடைபெற்றது. கடந்த மே 2ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வருகிற 16-ஆம் தேதி திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
6 முனைப் போட்டி
தமிழக அரசியல் களத்தில் இதுவரை இல்லாத வகையில் 6 முனைப் போட்டி நிலவுகிறது. 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 3776 வேட்பாளகள் களத்தில் உள்ளனர். தேர்தலையொட்டி முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இன்று கடைசி நாள் பிரச்சாரத்தை தலைவர்கள் எங்கே நிகழ்த்தினார்கள் என்று பார்ப்போம்...
முதல்வர் ஜெயலலிதா
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, கடந்த 9-ஆம் தேதி சென்னையில் பிரசாரத்தைத் தொடங்கி தாம் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
தனது வெளி மாவட்ட பிரசாரத்தை திருநெல்வேலியில் கடந்த வியாழக்கிழமை நிறைவு செய்த ஜெயலலிதா, சனிக்கிழமையன்று சென்னை புறநகர்ப் பகுதிகளில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி:
சென்னை சைதாப்பேட்டையில் தனது பிரசாரத்தைத் தொடங்கிய திமுக தலைவர் கருணாநிதி, கடந்த சில நாள்களாக தாம் போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், உள்ளிட்ட இடங்களில் வேன் மூலம் பிரசாரம் செய்த அவர், திருச்சி, மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார். உடல் நிலையை கருத்தில் கொண்டு வேன் மூலம் பிரசாரம் செய்வதைத் தவிர்த்து பொதுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
வழக்கம்போல சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சனிக்கிழமை பிற்பகல் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
முக ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் வேன் மூலமும், நடந்தும் பிரசாரம் செய்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கடந்த சில நாள்களாக சென்னையில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு சேகரித்து வருகிறார். காலையில் நடந்து சென்றும், மாலையில் வேன் மூலமும் பிரசாரம் செய்கிறார். தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான சனிக்கிழமையன்று சென்னையில் தாம் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.
விஜயகாந்த்
மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக-தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடந்த பல நாள்களாக தீவிர பிரசாரம் செய்து வந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவர் தான் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் கடந்த சில நாள்களாக பிரசாரம் செய்து வந்தார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் தனது பிரசாரத்தை பொதுக் கூட்டத்துடன் சனிக்கிழமை மாலை நிறைவு செய்தார். அவரது மனைவியும், தேமுதிக மகளிர் அணித் தலைவருமான பிரேமலதா சென்னை தியாகராயநகரில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
வைகோ
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ, தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளன்று காலையில் தூத்துக்குடியிலும், மாலையில் பாளையங்கோட்டையிலும் பிரசாரம் செய்தார்.
தொல்.திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல்.திருமாவளவன் தான் போட்டியிடும் காட்டுமன்னார்கோவிலில் பிரசாரம் செய்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒசூரில் சனிக்கிழமை தேர்தல் பிரசாரம் செய்தார்.
ஜிகே வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், சென்னை மயிலாப்பூரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணனும், திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனும் இறுதிக்கட்டமாக வாக்கு சேகரித்தனர்.
ராமதாஸ், அன்புணி ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்திலும், கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி தான் போட்டியிடும் பென்னாகரத்திலும் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
பாஜகவுக்காக..
கடைசி நாளான சனிக்கிழமையன்று பாரதிய ஜனதா கட்சிக்காக மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜாவடேகர், வெங்கய்யா நாயுடு ஆகியோர் சென்னையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தாம் போட்டியிடும் விருகம்பாக்கம் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் அனல் பறந்த பிரசாரம், சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. மே 16ஆம் தேதியன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.