சென்னையில் முழுவீச்சில் மீட்புப் பணிகளில் நிவாரணப் பொருட்களுடன் களமிறங்குகிறது கடற்படை
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை நகரில் டன் கணக்கான நிவாரணப் பொருட்களுடன் முழு வீச்சில் மீட்புப் பணிகளில் களமிறங்க உள்ளது கடற்படை. அரக்கோணம் கடற்படை தளத்தில் இதற்கான ஏற்பாடுகள் முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை தளத்துக்கு நேற்று இரவு நிவாரணப் பொருட்களுடன் ராணுவத்தின் சி.17 விமானங்கள் வந்து இறங்கியுள்ளன. இது தொடர்பாக நமது ஒன் இந்தியாவுக்கு கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் டி.கே. சர்மா கூறியதாவது:
2 கடற்படை விமானங்கள் மீட்பு பணிக்காக அரக்கோணத்துக்கு நேற்று இரவு வந்திறங்கின. மேலும் 3 விமானங்கள் ஒடிஷாவின் புவனேஸ்வரில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில் அரக்கோணம் கடற்படை தளம் மீட்புப் பணிகளில் முழுவீச்சில் இறங்குவதற்கு தயாராக உள்ளது.
ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நிவாரணப் பொருட்களுடன் வந்து சேர்ந்துள்ளனர். ஏர் இந்தியாவின் ஏ-320 விமானமும் சோதனை முயற்சியாக அரக்கோணம் வந்து இறங்கியது.
மக்களை மீட்டு எப்படி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வது என ஆலோசனை நடத்தி வருகிறோம். பொதுவாக ஹெலிகாப்டர் மூலமான உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் போது 5% வீணாகும்.
தற்போதைய நிலையில் ஒட்டுமொத்த சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை ஹெலிகாப்டர் மூலம் விநியோகிப்பது சரியானதாக இருக்குமா என தெரியவில்லை.
மேலும் அனைத்து சாலைகளும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அரசுதான் நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்க்க முன்வர வேண்டும். அரக்கோணம் கடற்படை தளத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்காக பேருந்துகள், வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அரக்கோணத்தில் மழை குறைந்தபோதும் ஓடுபாதை இன்னமும் ஈரமாகவே இருக்கிறது.
சைதாப்பேட்டையில் செயின்ட் தாமஸ் சர்ச் மற்றும் கோட்டூர்புரம் பகுதிகளில் கடலோர காவல்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் சென்னை போலீசாரும் இணைந்திருந்தனர். கடலோர காவல்படையினர் 1000க்கும் அதிகமான மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.
இவ்வாறு டி.கே.சர்மா கூறினார்.