மெட்ரோ ரயிலில் “டூரிஸ்ட் கார்டு” அறிமுகம்- பயணிகளைக் கவர புதிய நடவடிக்கை
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய சுற்றுலா அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை மாநகரில் முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையே கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. குறுகிய பகுதியான 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு இடையே இந்த போக்குவரத்து தொடங்கப்பட்டதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல், பயண கட்டணமும், ரூபாய் 10 முதல் ரூபாய் 40 வரை நிர்ணயிக்கப்பட்டதால் பயணிகள் யோசிக்க தொடங்கினர். இதனால், மெட்ரோ ரயிலில் தினமும் பயணிப்போர் எண்ணிக்கை 10 ஆயிரமாக குறைந்தது. மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு நாள் வருமானம் கிட்டதட்ட ரூபாய் 3 லட்சம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது.
இந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் 20 சதவீத கட்டண சலுகையுடன் 3 வகையான பயண அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதாவது 12 முறை (7 நாட்கள் செல்லத்தக்கது), 50 முறை (30 நாட்கள் செல்லத்தக்கது), 100 முறை (60 நாட்கள் செல்லத்தக்கது) என தொடர்ந்து பயணம் செய்யும் வகையில், பணத்தை ரீ-சார்ஜ் செய்து பயன்படுத்தும் முறை அமல்படுத்தப்பட்டது. இதற்கு பயணிகளிடம் ஓரளவு வரவேற்பு கிடைத்தது.
தற்போது சென்னை வரும் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் சுற்றுலா பயண அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா பயண அட்டையை பெற ரூபாய் 150 செலுத்த வேண்டும். இதில் ரூபாய் 100 பயண கட்டணமாகவும், ரூபாய் 50 திருப்பித்தரத்தக்க முன்பணமாகவும் எடுத்துக்கொள்ளப்படும். சுற்றுலா பயண அட்டை மூலம் மெட்ரோ ரெயிலில் ஒரு நாளில் ஒருவர் பல முறை பயணம் செய்யலாம். பயணம் செய்யும் அந்த ஒரு நாள் மட்டுமே செல்திறன் கொண்டது. சுற்றுலா பயண அட்டை வாங்கிய நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.