23 லட்சம் ‘அதுக்கே’ சரியா போச்சு! பாதியில் கழற்றி விட்ட கோமதி! மனைவிக்கு துரோகம்.. வியாபாரி பகீர்!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே தகாத உறவில் ஈடுபட்டு வந்த மளிகை கடை வியாபாரி ஒருவர் பெண்ணிடம் 23 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 13 சவரன் தங்க நகையை இழந்து தூக்கு மாட்டி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது நைனார் பாளையம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் முருகன் ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார் ரமேஷ் என்ற 42 வயதான வியாபாரி.
ரமேஷிற்கு திருமணமாகி மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இருப்பினும் ரமேஷ் அருகில் உள்ள வி.கிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண் கோமதி என்பவருடன் பல ஆண்டுகளாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

முறையற்ற உறவு
கோமதியுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக ரமேஷ் 23 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 13 சவரன் தங்க நகை ஆகியவற்றையும் கோமதிக்கு வாரி வழங்கியுள்ளார். இதற்கிடையில் கோமதியின் நடத்தை லோகநாதன் என்ற மற்றொரு நபர் பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையறிந்த ரமேஷ் கோமதியிடம் கொடுத்துள்ள அந்த 23 லட்ச ரூபாய் பணம் 13 சவரன் தங்க நகை உள்ளிட்டவைகளை வாங்கி விடலாம் என முடிவெடுத்து கோமதியிடம் சென்று கேட்டுள்ளார்.

பணம் கேட்டு மிரட்டல்
ஒரு கட்டத்தில் கோமதி ரமேஷை பார்த்து நீ என்னிடம் வந்து பழகியதற்கு.. அந்த பணம் சரியா போச்சு என்று கூறியுள்ளார். மேலும் நானே காடு வாங்கலாம் என்ற ஐடியாவில் இருக்கிறேன்.. நீ மேலும் ஒரு 20 லட்ச ரூபாய் தா என கேட்டுள்ளார் கோமதி. பணம் தராட்டி உன்னுடைய குழந்தைகளை ஏதாவது செஞ்சா அதன் பிறகு பணம் வரும் இல்லையா எனவும் மிரட்டியுள்ளார் கோமதி. வாங்கிய பணத்தை திருப்பி தராமல் மேலும் ரமேஷிடம் பணத்தை பிடுங்க கோமதி திட்டமிட்டிருந்துள்ளார்.

தற்கொலை
இதனால் அதிர்ந்து போன ரமேஷ் கொடுத்த பணமும் போச்சு, போதா குறைக்கு மேலும் கோமதி பணம் கேட்கிறாளே.. பணம் தரவில்லை என்றால் குழந்தைகளை ஏதாச்சும் செய்வேன் என மிரட்டுகிறாளே என பயந்து போன ரமேஷ்.. வேறு வழியின்றி தற்கொலை முடிவுக்கு சென்றுள்ளார். ரமேஷ் தான் குடியிருக்கும் வாடகை வீட்டில் புத்தாண்டு தினமான ஜனவரி ஒன்றாம் தேதி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

போலீசில் புகார்
ரமேஷ் தூக்கு மாட்டி தொங்குவதை கண்ட அவரது கடையில் வேலை பார்க்கும் மூர்த்தி என்பவர் அக்கம்பக்கத்தினரை அழைத்து கயிற்றில் தொங்கிய ரமேஷ் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது, அங்கு ரமேஷை பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறிவிட்டனர். இதன் பிறகு ரமேஷின் மரணம் குறித்து அவரது அண்ணன் செந்தாமரை கண்ணன் என்பவர் அருகில் உள்ள கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்து, தனது தம்பி ரமேஷ் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்றும், கோமதி இவரது மகன் ஸ்ரீதர் மற்றும் லோகநாதன் என்ற மூவரும் ரமேஷை தற்கொலைக்கு தூண்டி உள்ளனர் எனவும் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை
இதனைத் தொடர்ந்து.. கீழ்குப்பம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ரமேஷ் மரணத்திற்குப் பிறகு, ரமேஷ் தனது மனைவி ரம்யாவிற்கு பேசி பதிவிட்டிருந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது . அந்த ஆடியோவில் பேசிய ரமேஷ்.. ரம்யா எனக்கு வேறு வழி தெரியவில்லை, பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கோ.. கோமதியிடம் கொடுத்தது 23 லட்ச ரூபாய் பணம், 13 பவுன் நகை இருக்கிறது. நான் கடன் வாங்கியது எல்லாம் கோமதிக்காகத்தான்.. அவள் மகள் படிப்பு செலவுக்கு மட்டும் 10 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன்..

பகீர் ஆடியோ
அது அவ அம்மாவுக்கும் தம்பிக்கும் எல்லாத்துக்கும் தெரியும், பணம் கேட்டால் நீ வந்து என்னிடம் பழகியதற்கும் பணத்திற்கும் சரியா போச்சு என சொல்லுகிறாள்..நான் பணம் கேட்டு போனால் நமது குழந்தைகளை ஏதாவது செய்து விடுவேன் என மிரட்டுகிறாள்.. கோமதியும் லோகநாதனும் ஒன்றாக இருக்கிறார்கள் போலிருக்கிறது..எனது தற்கொலை முடிவுக்கு காரணம் லோகநாதன் தான்.. கோமதியும் அவள் மகன் ஸ்ரீதரும் உடந்தையாக இருந்தார்கள்..

கைது
இவர்களுக்கு என்ன பாடம் புகட்டனுமோ புகட்டுங்கள்.. கொடுத்த காசு எல்லாத்தையும் வாங்கிடுங்க, மறுபடியும் பிள்ளைகளை பத்திரமா பார்த்துக்கோ என கூறி முடித்து ரமேஷ் பேசிய ஆடியோ வெளியான நிலையில், இதன் பிறகு கீழ்குப்பம் காவல் நிலைய போலீசார் ரமேஷ் இறந்து 10 நாட்கள் கடந்த நிலையில் ரமேஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமான பெண் கோமதியை நேற்று மாலையில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications