மழை விட்டும் தூவானம் விடாத கதையாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சென்னை
சென்னை: சென்னையை உலுக்கி வந்த மழை ஒரு வழியாக விட்டு விட்டது. ஆனால் போக்குவரத்து சிக்கல் தற்போது புதிய தலைவலியாகியுள்ளது. தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் சென்னை நகரின் சில முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளை ஸ்தம்பிக்க வைத்தது.
சென்னை மாநகருக்கு ஆகாத விஷயங்கள் சில உள்ளன. அதில் முக்கியமானது கன மழை. பெரிய மழை பெய்தால் நகரமே கடலாக மாறிப் போய் விடும். அதைத் தொடர்ந்து பின் விளைவாக கடுமையான போக்குவரத்து நெருக்கடி வந்து சேரும்.
இப்போதும் அதுதான் நடந்து வருகிறது. விடாமல் பெய்த கன மழையால் நகரமே ஸ்தம்பித்துப் போய் விட்டது. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி விட்டனர். இதையடுத்து போக்குவரத்து நெரிசலும் மக்களை கஷ்டப்படுத்தி வருகிறது.
குண்டும் குழியுமான சாலைகள்
தொடர் மழை காரணமாக சென்னை நகரின் பல முக்கிய சாலைகள் மேடு பள்ளமாக குண்டும் குழியுமாக மாறிக் காணப்படுகின்றன. பேட்ச் ஒரா்க் செய்துள்ள போதிலும் அது தாங்கவில்லை. பெயர்த்துக் கொண்டு வந்து விட்டது.
ஏரிகள் உடைப்பால் சிக்கல்
பல இடங்களில் ஏரிகள் உடைப்பால் வெளியேறிய வெள்ள நீர் இன்னும் கூட பல முக்கியப் பகுதிகளை விட்டு அகலவில்லை. இதன் காரணாக சாலைகளை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை நிலவுகிறது. இதுவும் போக்குவரத்து நெருக்கடிக்குக் காரணம்.
ஜிஎஸ்டி சாலை ஓ.கே.
தாம்பரம் முதல் கிண்டி வரையிலான ஜிஎஸ்டி சாலை சற்று பரவாயில்லை. அந்த சாலையில் தற்போது விமான நிலையத்தை ஒட்டியுள்ள ஒரு இடம் தவிர மற்ற இடங்களில் எங்குமே தண்ணீர் தேங்கியிருக்கவில்லை. சாலையும் மோசமாக இல்லை. எனவே இங்கு வாகன ஓட்டிகள் பெரிய அளவில் சிரமத்தைச் சந்திப்பதில்லை.
மாலைக்கு மேல் கஷ்டம்
ஆனால் மாலைக்கு மேல் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விடுகிறது. நேற்று இந்த சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்வேறு அருகாமை சாலைகளிலிருந்து போக்குவரத்து திருப்பி விடப்பட்டதாலும், பலரும் ஜிஎஸ்டி சாலைக்கு மாறி வந்ததாலும் இந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
நாராயணபுரம் ஏரி உடைப்பு
இந்த நிலையில் நேற்று வெந்த புண்ணில் விரலைப் பாய்ச்சிய கதையாக பள்ளிக்கரணை - நாராயணபுரம் ஏரியின் ஒரு கரை மீண்டும் உடைந்தது. இதனால் அதிலிருந்து தண்ணீர் வெளியேறி வெள்ளக்காடாக்கியது.
வேளச்சேரி சாலையில் பாதிப்பு
இதன் காரணமாக நாகேஸ்வரி நகர், கல்பான் குட்டை, ராஜேஷ் நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கியது. மேலும் வேளச்சேரி மெயின் ரோடு, காமகோடி நகர் அருகே பள்ளிக்கரணை மேம்பால பகுதி முழுவதும் தண்ணீரால் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குளமாக மாறிய ராம்நகர்
இந்த வெள்ளம் காரணமாக வேளச்சேரி ராம் நகரில் மீண்டும் வெள்ளம் புகுந்து வீடுகள் அனைத்தும் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்தன. இதையடுத்து அங்குள்ள மக்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
வேதனை தரும் வேளச்சேரி சாலை
சென்னையில் மற்ற சாலைகளை விட வேளச்சேரி - கிழக்கு தாம்பரம் இடையிலான சாலையில்தான் பெரும் சிக்கல் வருகிறது மழைக்காலத்தில். காரணம், வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை இந்த சாலை குறுகலாக இருப்பதே. மேலும் அருகில் உள்ள பல ஏரிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் இந்த சாலை சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படும்.
ஆறு வழிச்சாலை ஹோகயா
இந்தப் பிரச்சினையா சரி செய்யவும், போக்குவரத்து நெரிசலை தீர்க்கவும் இந்த சாலையை 6 வழி சாலையாக மாற்றும் திட்ட்ம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது முழுமையாக இன்னும் தொடங்கவில்லை. சாலையோர ஆக்கிரமிப்புகள், வீடுகள் உள்ளிட்டவற்றை கையகப்படுத்துவதில் நிலவும் தாமதமே இந்த சாலை மாற்றம் தாமதமாக காரணம் என்று கூறப்படுகிறது.
ஐடி நிறுவனங்கள் பெருக்கம்
சோழிங்கநல்லூர் இன்று மிக முக்கியமான பகுதியாக மாறி விட்டது. பழைய மகாபலிபுரம் சாலை இன்று ஐடி காரிடாராக மாறி விட்டது. இதனால் மேடவாக்கத்திற்கும் ஏற்றம் கிடைத்துள்ளது. மேலும் வேளச்சேரி முதல் தாம்பரம் வரை அந்தப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் ஐடி காரிடாரில் உள்ள நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்வோர் அதிகம் உள்ளனர். எனவே வேளச்சேரி மெயின் ரோடும், மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான பெரும்பாக்கம் சாலையும் இன்று அதிக போக்குவரத்துடன் கூடிய சாலைகளைக மாறி விட்டன.
பெரும்பாக்கம் சாலை முடக்கம்
ஆனால் சமீபத்திய மழையால் பெரும்பாக்கம் ஏரி உடைப்பெடுத்து இன்னும் சாலையில் நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் அந்த சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை. எனவே மேடவாக்கம் - பெரும்பாக்கம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதுவும் நேற்று போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியக் காரணமாகி விட்டது.
வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை ஜாம் ஜாம்
நேற்று மாலைக்கு மேல் வேளச்சேரியில் தொடங்கி மேடவாக்கம் வரை வாகனங்கள் சாலையில் தேங்கி நின்றன. ஒவ்வொரு வாகனமும் இன்ச் இன்ச்சாகத்தான் நகர முடிந்தது. இதனால் பல வாகனங்கள் பள்ளிக்கரணையிலிருந்து பெருங்குடி செல்லும் சாலையிலும், அதேபோல கீழ்க்கட்டளை வழியாக ரேடியல் சாலை மூலமாக பல்லாவரம் செல்லும் சாலையிலும் மாறிப் புகுந்தன. இதனால் அத்தனை ரோடுகளிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஜிஎஸ்டி சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையெல்லாம் செய்தால்தான்
விரைவில் வேளச்சேரி சாலையை 6 அடி சாலையாக மாற்ற வேண்டும். வெள்ளம் ஏற்பட்டால் அது வடிவதற்குரிய வழிவகைகளைக் காண வேண்டும். மேடவாக்கம் - பெரும்பாக்கம் சாலையை விரிவுபடுத்த வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் எதிர்காலத்தில் இப்பகுதியில் மக்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்பது மக்கள் கருத்தாகும்.