பிளாட்பாரத்தில் பேனர்கள், போர்டுகள்.. அமைச்சர் வளர்மதி மீது போலீஸில் புகார்
சென்னை: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பிளாட்பாரத்தில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் உள்ளிட்டவற்றை வைத்ததற்காக அமைச்சர் வளர்மதி, சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
நடைபாதைகளில் விளம்பரப் பலகை வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் அதை மீறும் வகையில், சில நாட்களாக சென்னை மாநகரில் பல இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் அதிக அளவில் வைக்கப்பட்டு வருகின்றன.

இவற்றை வைத்தது பெரும்பாலும் அதிமுகவினர்தான். குறிப்பாக காமராஜர் சாலையில்தான் பிளாட்பாரமா அல்லது பிளக்ஸ் போர்டு பாரமா என்று கேட்கும் அளவுக்கு வைக்கப்பட்டிருந்ததாம்.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி ஒரு வழக்குத் தொடர்ந்தார். அதை, தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய முதல் பெஞ்ச் விசாரித்தது. ஏற்கனவே இதேபோல உள்ள வழக்குடன் இதைச் சேர்த்து விசாரிப்பதாக பின்னர் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து டிராபிக் ராமசாமி கூறுகையில், டிஜிட்டல் பேனர்கள் வைப்பது குறித்த தடை சட்டம் ஏற்கனவே உள்ளது. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைத்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஓராண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கலாம். தற்போது சென்னையில் காணப்படும் பேனர்கள், விளம்பர பலகைககள் குறித்து 5 காவல் நிலையங்களில் புகார் தெரிவித்திருந்தேன்.
இதில் மயிலாப்பூர் காவல்துறையினர் மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடைபாதையை மறைத்து பேனர் வைத்து மக்களுக்கு இடையூறு செய்ததாக கொடுத்த புகாரில் அமைச்சர் வளர்மதி, மேயர் சைதை துரைசாமி, கலைராஜன் எம்.எல்.ஏ உள்ளிட்டோரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தேன்.
எனக்கு காவல்துறையினர் கொடுத்த ரசீதில்(சி.எஸ்.ஆர்) அவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications