இங்கிலாந்தில் நாடக கலை: சாதித்த திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யா
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யா இங்கிலாந்தில் ஓர் ஆண்டு நாடக்கலை பற்றிய கல்வியை முடித்துவிட்டு நாடு திரும்ப இருக்கிறார்.
லிவிங் ஸ்மைல்' வித்யாவின் ரத்தமும் சதையுமான அவரது வாழ்க்கை, வலியும் ரணமும் நிரம்பியது.
பிறப்பில் ஆனாக இருந்த அவர், ‘திருநங்கையாக மறு பிறவி எடுத்தப் பிறகு எழுத்தாளர், நாடக நடிகர், திரைப்பட துணை இயக்குநர் என பன்முகங்களுடன் திகழ்கிறார்.
திருச்சியில் சரவணனாக பிறந்து
வித்யாவின் சொந்த ஊர் திருச்சி. அப்பா, அம்மா, இரண்டு அக்கா, ஒரு தங்கை. நடுவில் பிறந்த ஆண்குழந்தைக்கு ஆசையோடு வைத்த பெயர் சரவணன். அம்மாவின் மரணத்திற்குப்பின் அப்பா மறுமணம் செய்து கொண்டார்.
படிப்பில் சுட்டி
ஆண் குழந்தையா பிறந்த சரவணன் மீது அப்பாவிற்கும் சித்திக்கும் பாசம் அதிகம். பள்ளியில் எப்பவுமே ஃபர்ஸ்ட் ரேங்க். சரவணனை கலெக்டராக்கி பார்க்கவேண்டும் என்பதுதான் அப்பாவின் ஆசை
உடலில் ஏற்பட்ட மாற்றங்கள்
ஆனால் 10 வயதில் சரவணனின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள், அவரைப்பற்றி அவருக்கே புரியவைத்துள்ளது. ஆண்களுடன் விளையாடப் போகாமல் நூலகமே கதி என்று இருந்துள்ளார். நாடகம் தொடர்பான புத்தகங்களைப் படித்து தீராத காதலை வளர்த்துக்கொண்டுள்ளார்.
கல்லூரி வாழ்க்கை
கல்லூரியில் படிக்கும் போதே நிறைய நாடகங்களில் நடித்த சரவணன், தானொரு திருநங்கை என்று அப்போதுதான் உணர்ந்துள்ளார்.
வெளியேறிய சரவணன்
வீட்டை விட்டு வெளியேறி புனே சென்று பல இன்னல்களுக்கு இடையே திருநங்கையாக மாறினார். சரவணனாக இருந்து ‘வித்யா'வாக மாறியது இப்படித்தான்.
லிவிங் ஸ்மைல் வித்யா
வாழ்க்கையில்தான் சந்தோசமில்லை பெயரிலாவது சந்தோசம் வரட்டுமே என்று ‘லிவிங் ஸ்மைல்' என்ற அடையாளத்தை வித்யாவுக்கு முன் சேர்த்துக்கொண்டார்.
எழுத்தாளர் வித்யா
புனேநகரில் அவர் அனுபவித்த பிரச்னைகளை மையமா வைத்து எழுதிய ‘நான் வித்யா என்னும் நூல் ஆங்கிலம், மலையாளம், மராத்தி, கன்னட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
சாகித்திய அகாதெமி விருது
சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருதை கன்னட மொழிபெயர்ப்பு பெற்றுள்ளது. அஸ்ஸாம் மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாடகத்துறையில் வித்யா
‘கட்டியக்காரி' நாடகக்குழுவில் இணைந்து இந்தியா முழுவதும் பல நாடகங்களில் நடித்துள்ள வித்யாவிற்கு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் லண்டனில் ஓர் ஆண்டு நாடகக்கலை பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஆண்டு லண்டன் சென்ற அவர் வரும் ஜூலை 13ல் தமிழகம் திரும்ப உள்ளார்.
வித்யாவின் கனவு
லண்டனில் பயிற்சிக் காலம் முடிஞ்சு சென்னை வந்ததும் நாடகம் சார்ந்த ஒரு தொழிற்சாலையை பட்டறையை தொடங்கப் போறேன்.
ஸ்கிரிப்ட் எழுதுவது, நடிப்பு, மேடை அலங்காரம்னு நாடகம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் மத்தவங்களுக்கு சொல்லித் தரப் போறேன் என்று ஆசையுடன் கூறிவிட்டு லண்டன் சென்றார் வித்யா.
திருநங்கைகள் பற்றி நம்பிக்கை
திருநங்கைனாலே தப்பானவங்கனு நினைக்கிறாங்க. அப்படியில்லைனு இன்னிக்கி நிறைய பேர் நிரூபிச்சுட்டு வர்றாங்க. அவங்கள்ல ஒருத்தியா நானும் இருப்பேன். என் பணிகளும் இருக்கும்...'' என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார் லிவிங் ஸ்மைல்' வித்யா.