இன்ஜின் பேனட்களில் பெண்களை அமரவைக்காதீர்... பேருந்து ஓட்டுநர்களுக்கு உத்தரவு
சென்னை: அரசுப்பேருந்துகளில் இன்ஜின் பேனட்களில் பெண்களை அமரவைக்க கூடாது என போக்குவரத்துக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் அது தொடர்பான சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது.
அரசுப்பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில், ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருக்கும் இன்ஜின் பேனட் மீது பெண்கள் அமர்ந்து பயணம் செய்வது வழக்கமான ஒன்றாகும். ஆனால் இனி அப்படி அவர்களை அங்கு அமரவைக்கக் கூடாது என ஓட்டுநர்களுக்கு கறார் உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு போக்குவரத்துக்கழகம். மேலும், பேருந்தை ஓட்டும் போது அருகில் உள்ள பயணிகளிடம் பேசிக்கொண்டே ஓட்டுவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துவிட்டது.
இன்ஜின் பேனட் மீது பெண்களை அமரவைத்துக்கொண்டு சில ஓட்டுநர்கள் அவர்களிடம் பேசிக்கொண்டும், திரும்பிப்பார்த்துக் கொண்டும் பேருந்தை இயக்கும் போது விபத்துக்கள் நேரிடுவதாக போக்குவரத்துக்கழகத்திற்கு சென்ற புகார் கடிதங்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரசுப்பேருந்து ஓட்டுநர்கள் இனி அருகில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டே பேருந்தை இயக்குவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
"இங்க வாடா.. இதை கழட்டி விடு" பழங்குடியின சிறுவனிடம் தன் செருப்பை கழற்ற சொன்ன திண்டுக்கல் சீனிவாசன்
தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், சேலம், திருச்சி, மதுரை, கோவை, நெல்லை என 8 கோட்டங்கள் உள்ளன. அதில் இருந்து 22 ஆயிரம் பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. இதைத்தவிர அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து ஆயிரம் பேருந்துகள் தனியாக இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஓட்டுநர்களின் கவனச்சிதறலை தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக போக்குவரத்துக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.